சென்னை: குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என திமுக அரசின் ஊழல் பட்டியலை பாஜ வெளியிட்டு உள்ளது.குற்றவாளிக்

சென்னை: குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என திமுக அரசின் ஊழல் பட்டியலை பாஜ வெளியிட்டு உள்ளது.

குற்றவாளிக் கூண்டில் ஸ்டாலின் அரசு என்ற தலைப்பில் திமுக மீது குற்றப்பத்திரிகையை மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னையில் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது;

தமிழக வரலாற்றின் திருப்பு முனையான இந்த தேர்தல் அமையும். இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியை தமிழகம் இதற்கு முன் கண்டது இல்லை. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, சபரீசன் என ஒரு ஒட்டுமொத்த குடும்பமே இங்கு ஆட்சி நடத்தி தமிழகத்தை கொள்ளையடித்துள்ளது. தமிழகத்தின் மீதான மதிப்பை நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் சீரழித்துள்ளனர்.

வளர்ச்சி

தமிழ் கலாசரம், தமிழ் மக்கள், தமிழ் மொழி ஆகியவற்றால் நாங்கள் பெருமை கொள்கிறோம். வளர்ச்சிக்காக சாத்தியக்கூறுகளை அதிகம் கொண்ட மாநிலம் தமிழகம். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்குமான அதிக சாத்தியக்கூற்றுகள், ஆற்றலைக் கொண்ட மாநிலம் இதுவே ஆகும்.

தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் அமைந்துள்ள, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலும் ஆசியும் பெற்ற தேஜ கூட்டணி; கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழக மக்கள் பெரிதும் விரும்பி வரும் தமிழ் இனத்தின் பெருமை, தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் இலக்கியத்தின் மாண்பு, செழுமையான கலாசாரம், சிறந்த மரபுகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மீட்டெடுத்துத் தருவதை உறுதி செய்யும்.

ஊழல்

8 கோடி தமிழக மக்களின் வேதனையையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். ஸ்டாலின் மற்றும் உதயநிதி தலைமையிலான, ஊழல் மலிந்த மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற இந்த அரசாங்கத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நாங்கள் வெளியிடுகிறோம்.

இந்தக் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வார்த்தையும், மறுக்க முடியாத உறுதியான உண்மைகளால் வலுப்பெற்றுள்ளது; இவற்றை திமுகவாலோ, காங்கிரசாலோ மறுக்கவே இயலாது. அவர்களால் யதார்த்தத்திலிருந்து தப்பிக்கவோ, தமிழக மக்களின் கோபத்திலிருந்து தப்பியோடவோ முடியாது.

குற்றங்கள்

தமிழகத்தை ஆளும் இந்த தந்தை-மகன் கூட்டணி, தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக குற்றங்களை இழைத்துள்ளது. பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் குற்றங்களைச் செய்துள்ளனர்; தமிழக இளைஞர்களையும் விவசாயிகளையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

திமுக ஆட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நாங்கள் கண்டபோது அதிர்ச்சியடைந்தோம். பெண்களுக்கு எதிரான வழக்குகள் பெருகியிருப்பதை பார்த்து நாங்கள் திகைத்துப்போனோம்; குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2022ல் 4,968 ஆக இருந்த போக்சோ வழக்குகள், தற்போது கிடைத்துள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 2024ல் 6,969 ஆக உயர்ந்திருப்பதை பார்த்து நாங்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்.

பாலியல் வன்கொடுமை

திமுக கவுன்சிலர்கள், இளைஞரணி நிர்வாகிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனாலு தந்தை-மகன் தலைமையிலான திமுக அரசு குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; மாறாக, அவர்கள் அந்த குற்றவாளிகளுடன் கைகோர்த்துச் செயல்படுகின்றனர். இப்படிப்பட்ட குற்றங்களை இழைத்தவர்களை அவர்கள் பாதுகாக்கிறார்களா?

அதேபோன்று, தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஊழலானது, தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு பெரும் கொள்ளையாக இருக்கிறது. சட்டவிரோத மணல் கொள்ளையின் வாயிலாக அவர்கள் ஒரு ‘ஊழல் சாம்ராஜ்யத்தையே’ கட்டமைத்துள்ளனர்; கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் ஊழல்

மேலும், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘டாஸ்மாக் ஊழல் அரங்கேறியுள்ளது; இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல், தமிழக பொருளாதாரத்தையும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெறும் ஒப்பந்த முறைகேடுகள், கனிம வளக் கொள்ளைகள் மற்றும் நகராட்சி அமைப்புகளில் மலிந்துள்ள பல்வேறு ஊழல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அரசு வேலைக்கு பணம் என்ற அவலநிலையை கண்டு இருக்கிறோம்.

மன்னிக்க மாட்டார்கள்

ஒவ்வொரு பணி மாறுதல் மற்றும் நியமனத்திலும் நடைபெறும் முறைகேடுகளை நாம் பார்த்திருக்கிறோம்; கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8900 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை 32 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன; நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நீதிபதிகள் கூட தாக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. தமிழக மக்கள் ஸ்டாலினையும் உதயநிதியையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மொத்தம் 505 தேர்தல் வாக்குறுதிகளில், 70 சதவீதம் நிறைவேற்றப்படாமலே உள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வழங்கப்படவில்லை; பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. மாறாக, அவற்றின் மீது பெருமளவிலான மாநில வரிகள் விதிக்கப்படுகின்றன.. மேலும், கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படவில்லை; அரசுத் துறைகளில் 3.50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

போதை பொருள்

போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த திமுக அரசில், போதை பொருட்கள் தொடர்பான குற்றங்கள் 51 சதவீதம் அதிகரித்துள்ளன. 2021ல் இதுதொடர்பான குற்றங்கள் எண்ணிக்கை 6852. அதுவே 2022ல் 10,385 குற்றங்கள் பதிவாகி உள்ளன. ஒரு ஆண்டில் மட்டும் 51 சதவீதம் அளவுக்கு இந்த குற்றங்கள் உயர்ந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link