சென்னை: சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடும் காங். வேதனையை கூட்டணி கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செல்வப்பெருந்தகையிடம் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக மா. கம்யூ மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது செல்வப்பெருந்தகை பேசியதாவது;
ஒரு தேசிய கட்சியான காங்கிரசுக்கு 63 தொகுதிகள் கொடுத்தனர். 63ல் இருந்து அடுத்த தேர்தலில் 41 என ஆக்கினர். அடுத்த தேர்தலில் 25 என ஆக்கினார்கள். எங்களின் தலைமை 41 தொகுதிகள் கேட்டது. ஆனால், இதையே மண்ணை காப்பாற்றுவதற்காக, தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக குறைத்து கொடுத்திருக்கிறார்கள். 3 தொகுதிகளில் கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள், நாங்கள் வாங்கி இருக்கிறோம்.
ஆனால், எதற்காக இது? ஒரு மனநிறைவோடு வாங்கியிருக்கோமா என்றால்,மனநிறைவோடு வாங்கி இருக்கிறோம். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாங்கி இருக்கிறோம். இதில் காங்கிரசை சுட்டிக்காட்டினால் எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.
எங்களின் தோழமை கட்சியினருக்கு அன்போடு, பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் உரிமைகளை கேளுங்கள், அதற்காக காங்கிரசை சச்சரவுக்கு ஆளாக்காதீர்கள். முதல்வருக்கு மனம் இருக்கிறது, இருந்தால் கொடுப்பார். காங்கிரசுக்கு ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கும் தோழமை கட்சிகள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். 110 தொகுதிகளில் நின்றோம், பிறகு 63, பிறகு 41, பிறகு 25. இதை எல்லாம் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கூட்டணியை விட்டால்,இந்த மண்ணை காப்பதற்கும், தேசத்தை, தமிழக மக்களை காப்பதற்கும் எந்த கூட்டணியும் கிடையாது. இந்த கூட்டணியில் தான் இருக்க வேண்டும், காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
