சென்னை,: சட்டசபை தேர்தலில், தி.மு.க., போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், தற்போது அமைச்சர்களாக உள்ள மூன்று பேருக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 15க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு, ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, சென்னை அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி அரங்கத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் வெளி யிட்டார். இதில், 164 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
கடந்த சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கயல்விழிக்கு, இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை. அமைச்சரவையில் அவருக்கு போதிய முக்கியத்துவம் தரப்படாத நிலையில், ‘டம்மி’யான மனிதவள மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
செல்வாக்கு இல்லை
அதிலும் திறம்பட செயல்படவில்லை என்ற புகார் எழுந்ததுடன், தொகுதியிலும் செல்வாக்கு இல்லை என, முதல்வருக்கு உளவுத் துறையால் ‘ரிப்போர்ட்’ தரப்பட்டது. இதையடுத்து, அவருக்கு பதிலாக, தி.மு.க., சார்பில் டாக்டர் இந்திராணி களமிறக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற மனோ தங்கராஜ், பால்வளத் துறை அமைச்சராக இருக்கிறார். அந்த தொகுதி, இம்முறை தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியை அடிக்கடி விமர்சித்ததால், சர்ச்சையில் சிக்கிய மனோ தங்கராஜுக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் அணிசேர்ந்தன.
கேரளாவுக்கு மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக, அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தர, தலைமை விரும்பவில்லை. அதன் காரணமாகவே, அந்த தொகுதியை மார்க்சிஸ்டுக்கு கொடுத்து விட்டது.
கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சராக இருக்கும் காந்தி, கடந்த முறை ராணிப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது செயல்பாடுகள் மீது, முதல்வர் கடும் அதிருப்தியில் இருந்தார்.
அதனால், அவருக்கு ‘சீட்’ கிடைக்காது என, அறிவாலயத்தில் சொல்லப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் விதமாக, இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், அவரது மகன் வினோத் என்பவரை, அந்த தொகுதியில் தி.மு.க., நிறுத்தி உள்ளது.
கைத்தறித் துறை ஊழல்கள் குறித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையும், காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கூடுதல் காரணமாக அமைந்து விட்டது.
மறுப்பு
பெண்களையும், ஹிந்து மதத்தையும் கொச்சையாக பேசியதால், அமைச்சர் பதவி இழந்த பொன்முடிக்கு இம்முறை சீட் இல்லை என முன்கூட்டியே சொல்லப்பட்டு விட்டது.
அதனால், அவர் விருப்ப மனு கூட தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் கவுதமசிகாமணி, திருக் கோவிலுார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், தற்போது எம்.எல். ஏ.,க்களாக உள்ள பல்லாவரம் கருணாநிதி, தாம்பரம் ராஜா, காஞ்சிபுரம் எழிலரசன், செங்கல்பட்டு வரலட்சுமி மது சூதனன், ராயபுரம் ஐ.பி.மூர்த்தி, திரு.வி.க., நகர் தாயகம் கவி, எழும்பூர் பரந்தாமன் உள்ளிட்டோரும் இம்முறை வாய்ப்பை இழந்துள்ளனர்.
அவர்கள் சார்ந்துள்ள மாவட்டச் செயலர் களின் எதிர்ப்பால், இம்முறை வாய்ப்பை பறி கொடுத்துள்ளனர்.
லால்குடி சவுந்தரராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, முசிறி காடுவெட்டி தியாகராஜன் ஆகியோருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான பழனியாண்டி, பத்திரிகையாளர்களை தாக்கிய விவகாரத்தில் பெயரை கெடுத்து கொண்டார். அதனால், அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
மறைந்த தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன், வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அவருக்கும் மறுவாய்ப்பு இல்லை. மறைந்த மாவட்ட செயலர் ஜெ.அன்பழகனின் தம்பி கருணாநிதி, திநகர் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அவரை மாற்றி விட்டு, ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவுக்கு ‘சீட்’ தரப்பட்டுள்ளது.
வேடசந்துார் காந்திராஜன், ஓசூர் பிரகாஷ், ஜோலார்பேட்டை தேவராஜ், பரமக்குடி முருகேசன் உட்பட, 15க்கும் மேற்பட்ட ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தி.மு.க., இணை அமைப்புச் செயலர் அன்பகம் கலையின் மகன் கலை கதிரவனுக்கு, தென்காசி தொகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியிலிருந்து வெளியேறி, தி.மு.க.,வுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாட்டிலும், மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், பன்னீர்செல்வத்துடன் தி.மு.க.,வில் சேர்ந்த உசிலம்பட்டி அய்யப்பனுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. அத்தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
