சென்னை: சென்னையின் பாதுகாப்பு கருதி, தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடற்படை அமைப்புக்கு 2014ல் கொடுத்த 9.69 ஏக்கர் இடத்தை, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பாதுகாப்பு, குறிப்பாக சென்னையின் பாதுகாப்பு கருதி, முதல்வர் ஸ்டாலின் அந்த நிலத்தை மீண்டும் கடற்படைக்கு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடல் சீற்றம்
கடற்படையின் கீழ், ‘சாகர் பிரஹரி பல்’ என்ற சிறப்பு கடற்படைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு, தேசவிரோத சக்திகள் கடல் வழியாக தமிழகத்தில் நுழைவதை தடுக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டு வருகிறது.
தொடர் கடல் சீற்றம் காரணமாக, 60 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், ஐ.என்.எஸ்., அடையாறு பகுதியில் இருந்த கடற்படைக்கு சொந்தமான இடம், கடலுக்குள் போய்விட்டது. இதனால், தங்களின் பணிகளை மேற்கொள்ள போதிய இடவசதி இன்றி, இந்த சிறப்பு படைப்பிரிவு திணறி வந்தது.
இதையறிந்து, 2014ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஐ.என்.எஸ்., அடையாறு பகுதியில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை விருந்தினர் இல்லம் எதிரே உள்ள 9.69 ஏக்கர் இடத்தை, கடற்படை அமைப்புக்கு ஒதுக்கினார்; இதன் மதிப்பு, 242.70 கோடி ரூபாய்.
பணி தாமதம்
தேசவிரோத சக்திகளை சென்னைக்குள் புக விடாமல் தடுக்கும் வகையில், கடற்படையின் படகுகளை நிறுத்தி வைக்கவும், பழுது பார்த்தல், வீரர்களுக்கான பயிற்சி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதியாக, தமிழக அரசு அந்த இடத்தை ஒதுக்கியது.
ஆனால், பயிற்சி மையம் அமைக்கும் பணி தாமதம் ஆனது. கடந்தாண்டு தான், இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, அரசு ஒதுக்கிய இடத்தில் பணிகளை மேற்கொள்ள, கடற்படையின் சிறப்பு படைப்பிரிவு களமிறங்கியது.
இடத்தை அளந்து தரும்படி, தமிழக அரசின் வருவாய் துறையை நாடியது. வருவாய் துறை அதிகாரிகளோ, ‘நீங்கள் குறிப்பிடும் இடம் உங்களுக்கு சொந்தமானது அல்ல’ எனக்கூறி, கடற்படை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தனர்.
கடற்படை அமைப்புக்கு ஒதுக்கிய இடத்தை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, தகவல் கூட தராமல், கடந்த 2022ல் அரசாணை வெளியிட்டு தி.மு.க., அரசு திரும்ப எடுத்துக் கொண்டது தெரியவந்தது.
அரசாணையில், ‘திட்டமிட்ட எந்த பணிகளையும் கடற்படை மேற்கொள்ளாமல் விதிமீறலில் ஈடுபட்டதால் இடத்தை திரும்ப பெற்றதாக’ குறிப்பிடப்பட்டு உள்ளது.
அச்சுறுத்தல்
ஆனால், ஜெயலலிதா இந்த நிலத்தை ஒப்படைக்கும்போது, இந்த காலத்திற்குள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. கடற்படையும், பணி மேற்கொள்வதற்கான நிதிக்காக காத்திருந்தது. ஆனால், தி.மு.க., அரசு இந்த இடத்தை தற்போது திரும்ப எடுத்துக் கொண்டது, சென்னையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலையை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் பாதுகாப்பு, குறிப்பாக தேசவிரோத சக்திகள் சென்னைக்குள் நுழைவதை தடுக்கும் முக்கிய பணிக்கான அமைப்பின் தேவைக்காக, மீண்டும் இடத்தை ஒப்படைக்க வேண்டும் என, கடற்படை அதிகாரிகள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, தமிழக அரசின் வருவாய் துறை செயலர் மற்றும் தலைமைச் செயலரை, கடற்படை அதிகாரிகள் அடுத்தடுத்து பலமுறை சந்தித்துள்ளனர்; முதல்வரை நான்கு முறை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
எல்லா சந்திப்பின்போதும், ‘பார்ப்போம்’ என்பது மட்டுமே, கடற்படை அதிகாரிகளுக்கு பதிலாக கிடைத்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி, கடற்படை அமைப்புக்கான இடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், மீண்டும் கடற்படையிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதே, தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
