சென்னை: சென்னையில் மார்ச் 15ம் தேதி ஹிந்து மக்கள் கட்சி நடத்தும், தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு, அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர், கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அர்ஜுன் சம்பத்:
ஹிந்து மக்கள் கட்சி சார்பில், மார்ச் 15ம் தேதி, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., திடலில், தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு நடக்க உள்ளது. ஹிந்து விரோத தி.மு.க., அரசை அகற்றி, தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வழி வகுக்கும், இம் மாநாட்டுக்கு உள்நோக்கத்துடன், தி.மு.க., அரசின் காவல் துறை தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுதும் மாநாடு சம்பந்தமான சுவரொட்டிகள், விளம்பரங்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். சுவர் விளம்பரங்களை அழிப்பதோடு, ஹிந்து மக்கள் கட்சி தொண்டர்களையும், போலீசார் மிரட்டி பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.
மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், உளவுத்துறை வாயிலாக மிரட்டப்படுகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இந்தத் தடையை சட்டபூர்வமாக அணுகி, மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவோம்.
அண்ணாமலை:
ஹிந்து மக்கள் கட்சி மாநாட்டிற்கு, தி.மு.க., அரசு தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு அரசியல் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பது, விளம்பரங்களை அகற்றுவது, நிர்வாகிகளை மிரட்டுவது உள்ளிட்ட, தி.மு.க., அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் ஜனநாயகத்தின் நிலையை கேள்விக்குறியாக்குகின்றன.
நம் நாட்டுக்கு சற்றும் தொடர்பே இல்லாத பிரச்னைக்களுக்காக, தி.மு.க., கூட்டணி கட்சிகள் எந்தத் தடையுமின்றி, கூட்டங்கள், பேரணிகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஹிந்து மக்கள் ஒற்றுமை பேரணிக்கும், உள்ளரங்கில் நடக்கும் மாநாட்டிற்கும் அனுமதி மறுப்பது ஏன். இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்பாட்டை, தி.மு.க., அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை உயுர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
