சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில், சமையல் காஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்து, 10 நாட்களுக்கு மேலாகியும்,

சென்னை: சென்னை உட்பட பல மாவட்டங்களில், சமையல் காஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்து, 10 நாட்களுக்கு மேலாகியும், சிலிண்டர் வராததால், மக்கள் ஏஜன்சிகளை முற்றுகையிடுகின்றனர். இதனால், அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

மேற்காசிய நாடுகளில் நடக்கும் போரால், நம் நாட்டிற்கு எரிபொருள் எடுத்து வரும் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டது. இதனால், வீடுகளுக்கு தடையின்றி காஸ் வினியோகம் செய்ய, கடந்த மார்ச் 9ம் தேதி முதல், ஹோட்டல், வணிகப் பிரிவுகளுக்கு, ‘சிலிண்டர்’ வினியோகம் நிறுத்தப்பட்டது.

வீட்டு வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி, நகரங்களில், 25 நாட்கள், கிராமங்களில், 45 நாட்கள் என, அதிகரிக்கப்பட்டது. பின், வணிகப் பிரிவுகளுக்கு, 50 சதவீதம் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

அதேநேரம், வீடுகளுக்கு அறிவித்துள்ள கால இடைவெளியில், சிலிண்டர் முன்பதிவு செய்தாலும், முன்பதிவு செய்ய முடிவதில்லை. சிலிண்டர் முன்பதிவு செய்தாலும், 10 நாட்களுக்கு மேலாகியும், வீடுகளுக்கு சிலிண்டர் வருவதில்லை. இதனால், மக்கள் பதற்றமாகி, ஏஜன்சிகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

அங்கு வருவோருக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படுவதால், அனைவரும் அங்கு செல்ல, ஏஜன்சிகள் முன், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால், வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் தடைபட்டுள்ளது.

சென்னையில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, மேடவாக்கம் உட்பட பல இடங்களில், ஏஜன்சிகள் முன் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இதேநிலை பல்வேறு மாவட்டங்களில் உள்ளது.

இது குறித்து, பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: சிலிண்டர் முன்பதிவு செய்ய, 25 நாட்கள் காத்திருந்து, முன்பதிவு செய்தாலும், 10 நாட்களாகியும் சிலிண்டர் வருவதில்லை. முன்பதிவு செய்து, பல நாட்கள் கடந்தும், ஓ.டி.பி., எண் வருவது இல்லை.

இது குறித்து, ஏஜன்சிகளுக்கு சென்று பணியாளர்களிடம் கேட்டால், ‘சிலிண்டர் வரவில்லை; அதனால் தாமதமாகிறது’ என்று அலட்சியமாக கூறுகின்றனர். வீட்டில் உள்ள சிலிண்டரும் தீர்ந்து விட்டது. அதேசமயம், சிறிய உணவகங்கள், டிபன் கடைகளில், வீட்டு சிலிண்டர் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு எப்படி அந்த சிலிண்டர் கிடைக்கிறது.

ஏஜன்சிகளில் இருந்தே, வீடுகளுக்கு வினியோகம் செய்ய வேண்டிய சிலிண்டர்களை, ஒரு சிலிண்டர் 2,000 ரூபாய் என, முறைகேடாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏஜன்சி நிறுவனங்கள், முன்பு போல் வீடுகளுக்கு உடனுக்குடன் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்ய, எண்ணெய் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உண்மை தன்மை சரிபார்ப்பு பணியை முடிக்காதவர்களுக்கு ரசீது வருவதில்லை
காஸ் ஏஜன்சிகளின் உரிமையாளர்கள் கூறியதாவது: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கும், பயனாளியின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணி, இரு ஆண்டுகளாக நடக்கிறது.
காஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் ஏஜன்சிக்கு சென்று, விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். சென்னையில், 30 சதவீதம் பேர் மட்டும் பதிவு செய்த நிலையில், மற்ற மாவட்டங்களில், 50 – 60 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர்.
தற்போது, சிலிண்டர் முன்பதிவு செய்திருப்போரில், உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணியை முடித்தவர்களுக்கு மட்டுமே, சிலிண்டர் வினியோகம் செய்வதற்கான கட்டண ரசீது எடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, முன்பதிவு செய்தாலும் ரசீது வராததால், சிலிண்டர் வினியோகம் செய்ய முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணியை முடிப்பதற்கு, வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அனுப்பப்படவில்லை. காலக்கெடு எதுவும் நிர்ணயிக்காமலேயே, சிலிண்டர் வினியோகத்தை முடக்கி வைப்பது சரியல்ல.
‘இது குறித்து ஊடகங்கள் வாயிலாக முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், மக்களிடையே குழப்பமும், பதற்றமும் அதிகரிக்கும். ஒரு மாதத்துக்கு முன்பு வரை சிலிண்டர் வினியோகம் செய்து விட்டு, இப்போது திடீரென கெடுபிடி காட்டுவது சரியல்ல’ என்றனர்.

Source link