சென்னை: சென்னை கோயம்பேட்டில் உதவித்தொகை உயர்வு கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தி வரும் மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
உதவித் தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு விழிப்புணர்வு பதாகைகளில் , ‘ சைகை’ மொழி குறியீட்டை பயன்படுத்த வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து, பஸ்சில் அழைத்துச்சென்று ஏற்றியும் இறக்கியும் அலைக்கழித்தனர். அவ்வாறு இறக்கி விடும்போது, மாற்றுத்திறனாளிகளை போலீசார் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதில், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் மனைவி ஜான்சி ராணி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்கள் கோரிக்கையை ஏற்காத அரசை கண்டித்தும், கைது என்ற பெயரில் தங்களை அலைக்கழிப்பு செய்ததை கண்டித்தும் இன்று மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் பிரதான சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சட்டசபை கூட்டம் நடக்கும் நேரத்தில், மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழக முதல்வரின் நேரடி பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் போலீசார் மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
போலீசாரின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணனின் மனைவியுமான பா. ஜான்சிராணி படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.திமுக கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே போலீசார் தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, திமுக அரசு அனைத்து விதமான ‘கோரிக்கைக் குரல்களை’ ஒடுக்கப் நினைப்பதுதான் திமுக-வினுடைய Fascist mentalityக்கான Proof!
ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து, அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
