சென்னை: டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து பிப்ரவரி 11ல் அதிமுக சார்பில் கண்டன பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்; பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதை எதையுமே முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது கண்டனத்திற்குரியது.
அந்த வகையில், டாஸ்மாக் நிறுவன ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம்,பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடியா திமுக அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், திமுக அரசையும், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்தும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் பேரணி நடத்தப்பட இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து, எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை இந்தப் பேரணி நடக்கும். அதன்பிறகு, டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
