சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள கையடக்க விற்பனை முனைய கருவிகளின் இயக்கம், 'சர்வர்' பாதிப்பால் அடிக்கடி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் உள்ள கையடக்க விற்பனை முனைய கருவிகளின் இயக்கம், ‘சர்வர்’ பாதிப்பால் அடிக்கடி முடங்குகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. தனியார் மதுபான தயாரிப்பு ஆலைகளில் இருந்து, மது வகைகளை வாங்குவது முதல் சில்லரை கடைகள் வாயிலாக விற்பது வரை, முழுதுமாக கணினிமயமாக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் தலா இரண்டு, மூன்று கையடக்க விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த கருவியில், மது பாட்டிலில் உள்ள, ‘கியூஆர்’ குறியீட்டை, ‘ஸ்கேன்’ செய்து பணியாளர்கள் விற்கின்றனர்.

தற்போது, ‘சர்வர்’ பாதிப்பால், கையடக்க கருவியின் இயக்கம் அடிக்கடி முடங்குகிறது. இதனால், ‘ஆன்லைன்’ வாயிலாக பணம் செலுத்த முடியாமல், மது பிரியர்கள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது:

மது பாட்டிலை ஸ்கேன் செய்யும்போது தொலைத்தொடர்பு சிக்னல் சரிவர கிடைக்காததால், கையடக்க கருவியின் இயக்கம் முடங்குகிறது. ஆன்லைனில் பணம் பெறும்போது சர்வர் வேலை செய்வதில்லை. இதனால், மது பாட்டிலை ஸ்கேன் செய்து விற்க தாமதம் ஆவதுடன், பணமும் வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால், மது வாங்க வருவோர் பணியாளர்களுடன் தகராறு செய்கின்றனர். இதுகுறித்து, மாவட்ட மேலாளர்களிடம் புகார் அளித்தாலும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதில்லை. கணினிமய திட்டத்தால், பல முறைகேடுகள் தடுக்கப்பட்டு உள்ளன’ என்றார்.

Source link