சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில், தமிழ் மொழி தகுதித்தேர்வில், ஒன்பது சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப்பப்படுகின்றன. அதன்படி, உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உட்பட, குரூப் – 2, 2ஏ பணிகளில், 828 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜூலை, 15ல் வெளியிடப்பட்டது.
குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு, கடந்த ஆண்டு செப்., 28ல் நடந்தது. தேர்வு முடிவுகள் டிச. 22ல் வெளியாகின. அதில், குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 1,126 பேர்; குரூப் 2 ஏ தேர்வுக்கு 9,457 பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வுகள், தமிழகம் முழுதும், 38 மையங்களில், கடந்த பிப்., 8ம் தேதி நடக்க இருந்தது. அன்று தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட, குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு, தமிழகம் முழுதும் நடந்தது. முதலில் குரூப் 2ஏ, பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு தேர்வு, பின்னர், குரூப் 2, 2ஏ தமிழ் மொழி தகுதி தேர்வும் நடந்தது.
பொது அறிவு, பொது நுண்ணறிவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 8,694 பேர் எழுதினர். அதாவது, 93.86 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 8,687 பேர் பங்கேற்றனர். அதாவது, 91.05 எழுதினர்.
பொது அறிவு தேர்வில், தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்டம், மத்திய அரசின் கல்வித்துறை பட்ஜெட், முதல்வர் நியமனம், அமைச்சரவை நியமனத்தில் பிரதமரின் பங்களிப்பு உட்பட பல்வேறு வினாக்கள் இடம் பெற்றன.
