சென்னை: தன் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதை நியாபகம் வைத்து கனிமொழி பேச வேண்டும். இன்னமும்

சென்னை: தன் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதை நியாபகம் வைத்து கனிமொழி பேச வேண்டும். இன்னமும் முடியவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஸ்டாலினைநம்பிப் பேசி மீண்டும் திகாருக்குப் போய்விடாதீர்கள் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசினார்.

சென்னையில் ராயபுரம் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பெரியபாளையத்தம்மன் நகரில் இபிஎஸ் பேசியதாவது; கருணாநிதி குடும்பமே கிளம்பிவிட்டது, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என குடும்பமே தேர்தலில் இறங்கிவிட்டது. தேர்தல் பிரசாரத்தில் கூட குடும்பம் தான் முன்னிலை வகிக்கிறது.

கனிமொழியை நன்றாக வேலை வாங்குகிறார்கள். ஏற்கெனவே அழகிரிக்கு ஆப்பு வைத்துவிட்டார். எப்படியோ தப்பித் தவறி கனிமொழி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறார், அவரை வைத்து என்னை விமர்சிக்கிறார்கள். உங்கள் அப்பாவையே பார்த்துவிட்டோம், உங்களை சமாளிப்பது ஒன்றும் சிரமம் அல்ல.

கனிமொழி கண்டுபிடுத்துவிட்டார். இபிஎஸ் தேர்தல் முடிந்ததும் கவர்னராக போவாராம். இதையெல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்து பேசுகிறீர்கள். எவராலும் எங்களை விலைக்கு வாங்க முடியாது. எவ்வளவோ முயன்று வழக்கு போட்டு அவப்பெயர் உண்டாக்க பார்த்தீர்கள். அவையெல்லாம் தூள் தூளாக்கப்பட்டது.

எப்போது பார்த்தாலும் காலில் விழுவதைப் பற்றியே பேசுகிறார்கள், நாட்டில் அதுவா முக்கியம்? நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு இபிஎஸ் காலை பிடித்தார் என்கிறார். நான் பதவி கிடைத்ததால் ஆசிர்வாதம் வாங்கினேன். பண்புள்ள குடும்பத்தில் பிறந்தால் தெரியும். அதிமுக ஆட்சியில் தவறு என்றால் சொல்லுங்கள், பதில் சொல்லத் தயார்.

ஜெயலலிதா காலில் விழுந்தது தப்பாம், நம்மை ஆளாக்கியது ஜெயலலிதா தான். நாங்கள் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் என்ன தவறு..? உங்க தாத்தா முதல்வர், உங்கள் அப்பா முதல்வர், உங்களுக்கு நல்லா வசதி இருக்கிறது. அதனால் எதைப் பற்றியும் கவலையில்லை. செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஆணவத்தில் பேசுகிறார்கள். இந்த ஆணவம் இருக்கக்கூடாது. பதவி வருகின்ற போது பணிவு வர வேண்டும்.

கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன். கட்சி சார்பில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு 7 முறை சிறைக்குச் சென்றேன். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள்..? ஊழல் செய்து சிறைக்குச் சென்றீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் அதுதான் வித்தியாசம், நாவடக்கம் தேவை. இன்று அதிமுக அமித்ஷா திமுகவாகி விட்டதாம், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எல்லோரும் இதையே தான் பேசுகிறார்கள், அமித்ஷா என்ன பாகிஸ்தான்காரரா? அவரை பார்ப்பது தவறா? பார்த்தால் பதறுகிறார்கள். ஊழலை போட்டுக்கொடுத்து தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகிறது, கனிமொழி அவர்களே, உங்கள் வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்து பேசுங்கள். இன்னமும் முடியவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அவர்களை நம்பிப் பேசி மீண்டும் திகாருக்குப் போய்விடாதீர்கள். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

உதயநிதி பேச்சுக்கு இபிஎஸ் பதிலடி

துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தங்கசாலை, அரசு அச்சகம் இபிஎஸ் பேசியதாவது; உதயநிதி பற்றி கட்சி நிர்வாகிகள் சொன்னதை பேசினேன். பாலிடாயில் குடித்ததெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது என்று சொன்னேன். எங்கேயும் பெயரைக் குறிப்பிடவில்லை, இவருக்கு ஏன் கோபம் வருகிறது..? அவரே உண்மையை ஒப்புக்கொண்டார், உங்களை நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை, யார் குடித்தாரோ அவரைச் சொன்னேன், அதற்கு எடப்பாடி பழனிசாமி இனி பால்டாயில் பழனிசாமி என்கிறார். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் பால்டாயில் குடித்தது யார் என்ற உண்மை தெரிந்துவிட்டது.

நான் 51 ஆண்டு காலம் எந்த தலைவரையும் விமர்சித்ததில்லை, இன்று முதல்வர், துணை முதல்வர் எங்களை விமர்சித்தால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். இபிஎஸ் திண்ணையில் படுத்துக்கொண்டு முதல்வரானார் என்கிறார். இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? எப்போது பார்த்தாலும் ஸ்டாலின், நான் யார் தெரியுமா முத்துவேல் கருணாநிதி மகன் என்கிறார். கருணாநிதி திருட்டு ரயிலில் வந்தார் என்பது மறைந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய புத்தகத்தில் இருக்கிறது, நாம் சொல்லவில்லை, இதை பேசக்கூடாது என்று நினைத்தேன், பேச வைத்துவிட்டீர்கள்.

திருவண்ணாமலையில் பேசிக்கொண்டிருந்தபோது மறந்து விட்டு, என்ன சின்னம் என்று வேட்பாளரிடம் கேட்கிறார். என்ன சின்னம் என்பதே தெரியாத தலைவர். இப்படிப்பட்ட முதல்வர் தான் ஆள்கிறார், ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என நான்கு அதிகார மையங்கள் இருந்தால் நாடு தாங்குமா? நான்கு முதல்வர்கள் இருந்தால் இந்த நாடு உருப்படுமா? திமுகவில் ஆளே இல்லை, 8 பேர் அமைச்சர் ஆகியிருக்கிறார் கள். நம்மால் தூக்கி எறியப்பட்டவர்கள் செல்லாத நோட்டுக்கு சமமானவர்கள். அப்படி 19 பேர் எம்எல்ஏவுக்கு நிற்கிறார்கள். திமுக கூடாரம் காலியாக விட்டது. மக்கள் செல்வாக்கை ஸ்டாலின் இழந்து விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Source link