சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 08) நடக்க இருந்த குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று( பிப்.,08) குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற இருந்தன. உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
இந்த சூழலில், இன்று சென்னையில் சில இடங்களில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன. இதனால் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
இதனால் தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், கடைசி நேரம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
