சென்னை: ”தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுகிறது,” என அக்கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி விட்டது. எங்கள் கட்சியை பொறுத்தவரை, தமிழ்நாடு விடுதலைப்படை, மாவோயிஸ்ட் இயக்கங்கள், தமிழ்நாடு மீட்சிப்படை என, ஒரு அரசியல் தலைமை குழுவை கொண்ட கட்சியாக உள்ளது. எனவே, நான் தனித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
தி.மு.க.,வுக்கு குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் ஆதரவு அளித்தேன். அதை நிறைவேற்றுமாறு கேட்டபோது, ‘நீங்கள் என்ன எங்களை பார்த்து ‘டிமாண்ட்’ வைப்பது’ என, பெரியண்ணன் மனப்பான்மையில் தி.மு.க., கையாண்டது.
வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடை அமல்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு கோரியும், அதை செய்யவில்லை. இதற்கு, முதல்வரை இயக்குகிற, உயர் ஜாதி ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் கொண்ட அதிகாரிகளே காரணம்.
பரந்துார் விமான நிலையம் வரும் பகுதியில், தி.மு.க., அமைச்சர் ஒருவர், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி போட்டுள்ளார்.
எந்தெந்த அமைச்சர்கள், எந்தெந்த துறைகளின் செயலர்கள் தவறு செய்தனர் என்ற புள்ளி விபரம் என்னிடம் உள்ளது. இதை, தமிழக மக்களிடம் தெரிவிப்பேன்.
நான் இறுதியாக மூன்று தொகுதிகள் கேட்டேன். வேறு கட்சி அழைக்கும்; அதிக இடங்கள் கொடுக்கும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது. பா.ஜ., கூட்டணியில் எங்கள் கட்சி இடம் பெறாது.
இனி, நான் முன்வைத்த 10 கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் சேர்ந்து, தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
