சென்னை: தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்து வெளியாக தயாராகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜயின் கடைசி படம் என்ற அறிவிப்பால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால், படம் வெளியாவதற்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் முழுதும் ‘டெலிகிராம்’ செயலியில் வெளியாகி, தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது. இவ்வாறு அந்தப்பதிவில் ரஜினி கூறியுள்ளார்.
