சென்னை: திமுக ஆட்சியில் அரசுப் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே சேலம் விபத்து சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
சேலம் – உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தமிழகத்தில் அரசுப் பஸ்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.
