சென்னை: திருநெல்வேலியில் பனைமரம் ஏறி பதநீர் இறக்கும் தொழிலாளி மீது போலீஸ் எஸ்ஐ துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனைமரத்தில் பதநீர் இறக்கியபோது, கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் போலீஸ் எஸ்ஐ துப்பாக்கி சூடு நடத்தியதில், 2 துப்பாக்கி குண்டுகள் துளைத்து பனைமரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமுள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்திலும், எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் திமுக அரசின் காவல்துறை தொடர்ந்து ஏவல் துறையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
