சென்னை: தி.மு.க.,வினருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:
தி.மு.க., கூட்டணியில், புதிய கட்சிகள் இணைந்ததால், உரிய அளவில் தொகுதிகளை பங்கிட வேண்டிய சூழலும் தேவையும் இருக்கிறது.
நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் வி.சி.க., – இ.கம்யூ., – மா.கம்யூ., – ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசித்தே, தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் நிறைவேறின.
கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை கூறி, ம.நீ.ம., தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கிறேன்.
தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்ப முயற்சி செய்கின்றனர்.
நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. இந்த முறை, 16,500 பேர் பங்கேற்றதால், மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடந்தது. கட்சியினர் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என, 2026 தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.
இதுபோல, கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நம் சின்னங்கள்தான்; 234 தொகுதிகளும் நம் தொகுதிகள்தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
