சென்னை: துாத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியில், பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, படுகொலை

சென்னை: துாத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியில், பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குக்கு சவால் விட்ட பல சம்பவங்களுக்கும் அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது பற்றிய விபரம்:

இபிஎஸ், அ.தி.மு.க., பொதுச்செயலர்

பாலியல் கொடுமை தொடர்பாக புகாரளிக்க வந்த மாணவியின் பெற்றோரிடம், காணாமல் போன பெண்ணையே சந்தேகிக்கும் வகையிலும் காவல் துறை செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது, தி.மு.க., ஆட்சியில் காவல் துறை எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

போராட்டம் நடத்தும் மாணவியின் உறவினர்களிடம், காவல் துறையும், தி.மு.க., – எம்.எல்.ஏ.,வும் சமாதானம் பேசுகின்றனர். எதையோ மறைக்கவோ அல்லது குற்றவாளிகளை காப்பாற்றவோ தி.மு.க., அரசு முயற்சிக்கிறதா?

விஜய், த.வெ.க., தலைவர்

துாத்துக்குடியில், மாணவி, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வெட்டிக் கொலை; மதுராந்தகத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; நாமக்கல்லில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்று, அவரது 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை; மானாமதுரையில் காவல் மரணம்.

இப்படி, தி.மு.க., அரசின் அலட்சியத்தால், பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவது தினமும் நடக்கிறது. தன் ஆட்சியில், தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதை கண்டு கொள்ளாமல், கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே, முதல்வர் ஸ்டாலின் முழு கவனத்தை செலுத்துகிறார்.

சீமான், நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர்

குமாரபாளையத்தில் ஏழு வயது சிறுமி, விளாத்திகுளத்தில் பிளஸ் 2 மாணவி, மதுராந்தகத்தில் 16 வயது சிறுமி என ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வன்கொடுமைகள் நடந்துள்ளன.

அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்காமல், அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், மதுவை ஒழிப்போம் என, உறுதிமொழி மட்டும் எடுப்பது வேடிக்கை. மகளிருக்கு, 1,000, 2,000 ரூபாயை விட, அவர்களுக்கு பாதுகாப்பை அளிப்பதே உண்மையான உரிமை.

நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்

ஒரே நாளில், 14 வயது பள்ளி மாணவி, தையல் கடையில் 19 வயது பெண் என பாலியல் குற்றச் செய்திகள் வந்துள்ளன. ஒரு வாரமாக நடக்கும் கொடூரங்களே, கேடு கெட்ட தி.மு.க., ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி. தமிழகத்தை பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாற்றிய, தி.மு.க.,வை தமிழகத்திலிருந்து துரத்தியடிப்போம்.

ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், பிளஸ் 2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின், தன்னை ‘தமிழகத்தின் அப்பா’ என கூறிக்கொள்வது வெட்கக்கேடு. டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடினால்தான், பெண்கள் அச்சமின்றி வாழ முடியும்.

அன்புமணி, பா.ம.க., தலைவர்

வளர்ச்சி அடைந்த மாநிலம் என கூறப்படும் தமிழகத்தில் வாழ்கிறோமா அல்லது சட்டம் – ஒழுங்கு பற்றி கவலைப்படாமல், ஒரு கூட்டம் மட்டும் கொள்ளையடித்து, சொகுசாக வாழ்வதற்காக, மற்றவர்களின் நலன்களை காவு கொடுக்கும் கொடூரமான நிர்வாகத்தில் வாழ்கிறோமோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

தினகரன், அ.ம.மு.க., பொதுச் செயலர்

முதல்வர் ஸ்டாலின், தன்னை தானே, ‘தமிழகத்தின் அப்பா’ என தம்பட்டம் அடிப்பது வெட்கக்கேடு. வரும் தேர்தலில், தே.ஜ., கூட்டணி பெறும் வெற்றி வாயிலாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களும், தீயசக்தி தி.மு.க.,வின் அத்தியாயமும் முடிந்து போகும்.

வீரபாண்டியன், இ.கம்யூ., மாநில செயலர்

துாத்துக்குடி மாவட்டத்தில் மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில், போலீஸ் துறை அலட்சியம் காட்டி உள்ளது. இந்த மர்ம மரணம் குறித்து, உண்மையை கண்டறிய முறையான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

சண்முகம், மா.கம்யூ., மாநில செயலர்

மாணவி காணாமல் போனதாக புகார் அளித்த உடனேயே, போலீஸ் துறை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், தூத்துக்குடி மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை தடுக்கப்பட்டிருக்கும். குற்றவாளிகள் அனைவரையும், போக்சோ’ சட்டத்தில் கைது செய்வதோடு, அலட்சியமாக நடந்து கொண்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் சரத்குமார், தமிழக பா.ஜ.,

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனையோ, மரண தண்டனையோ அளித்தால் மட்டுமே, வருங்காலங்களில் இத்தகைய அவலங்கள் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Source link