சென்னை: தொகுதி மறுவரையறை ஆபத்து: இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா? தென்றலாக இருக்கும் தெற்கை கடும் புயலாக மாற்றி விடாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தொகுதி மறுவரையறை எப்படி நடக்கும் என கூறாமல் மத்திய பாஜ அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்? தொகுதி மறுவரையறை ஆபத்து: இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கிறதா? தென்றலாக இருக்கும் தெற்கை கடும் புயலாக மாற்றி விடாதீர்கள். மக்கள் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்.
2001ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதி மறுவரையறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது போலவே, தற்போதைய பிரதமர் மோடியும் அதேபோன்று செய்ய வேண்டும் என்று தென் மாநிலங்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைக்கு அவரது பதில் என்ன?
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடரை அவசரமாகக் கூட்டுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29க்குப் பிறகே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்த நியாயமான கருத்தைப் புறக்கணிப்பதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
கலந்தாலோசனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமலேயே, மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பது, சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு இல்லையென்றால் வேறு என்ன?
எங்களோடு பேசாமல் எந்த முடிவு எடுத்தாலும் உயிரே போனாலும் உடன்பட மாட்டோம். தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வடக்குப் பகுதிக்கு அதிக அதிகாரங்களைக் குவிக்கும் மத்திய பாஜ அரசின் நடவடிக்கைகளை திமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம், எங்களின் ஒப்புதல் இல்லாமலும், எங்களிடம் கலந்தாலோசிக்காமலும் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும், அதற்கு எத்தகைய விலை கொடுக்க நேர்ந்தாலும் நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையைக் கோருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
