சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம், தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம், தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க., என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ள விஜய், தன் கடைசி படம் என அறிவித்த ஜனநாயகன் , பொங்கல் பண்டிகைக்கு முன், கடந்த ஜன., 9ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தணிக்கை சான்றிதழ் அளிக்க மறுத்தது. இதனால் திட்டமிட்டபடி, பொங்கல் பண்டிகையின்போது ஜனநாயகன் வெளியாகவில்லை.

இதை எதிர்த்து, படத்தை தயாரித்த கே.வி.என்., புரடக்ஷன்ஸ் நிறு வனம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘படம், 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை வெளியிடாவிட்டால் எங்களுக்கு இழப்பு ஏற்படும். எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்’ என, தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.

‘குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று எங்கள் தரப்பை நிர்ப்பந்திக்க முடியாது’ என, வாரியத்தின் வழக்கறிஞர் வாதிட்டார்.

மறு தணிக்கைக்கு ஒப்புக் கொண்ட, கே.வி.என்., நிறுவனம், வழக்கை திரும்ப பெற்றது. அதை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் மறு தணிக்கை, நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. அப்போது தணிக்கை வாரிய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, வாரியம் திருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜனநாயகன் படத்தின் நாயகன் விஜய், தற்போது அரசியல் கட்சி தலைவராக உள்ளார். எனவே, தேர்தல் நடத்தை விதிகளின்படி, அவர் நடித்துள்ள படம், தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்து, படம் வெளியீட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜனநாயகன் படத்தை வைத்து, தேர்தல் கூட்டணிக்கு வரும்படி, விஜயை பா.ஜ., கட்டாயப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தற்போது தணிக்கை வாரியம் தன் பணியை முடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஜனநாயகம் குறித்து மட்டுமல்ல; ஜனநாயகன் திரைப்படம் குறித்தும், தேர்தல் கமிஷன் முடிவெடுக்க உள்ளது.

Source link