சென்னை: ” நாங்கள் டில்லி சென்றால் அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலின் வாடிக்கை. அவருக்கு பயம் வந்துவிட்டது,” என அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கூறினார்.
பாஜ, அமமுக, பாமக உடன் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு இபிஎஸ் கூறியதாவது: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இன்னும் பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்று இரவுக்குள் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிந்து எத்தனை தொகுதி அறிவிக்கப்படும். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எங்கள் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்கின்றனர். தேஜ கூட்டணி உணர்வுப்பூர்வமாக அமைக்கப்பட்ட கூட்டணி. வெற்றி கூட்டணி.
வாடிக்கை
210 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும். அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நாங்கள் டில்லிக்கு சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வரின் வாடிக்கை.ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவ்வப்போது கருத்து பரிமாறுவதற்காக டில்லி செல்கிறோம். ஆனால், தோல்வி பயம் காரணமாக நாங்கள் டில்லி சென்றால் பயப்படுகிறார். அச்சப்படுகிறார்.
டில்லி சென்று சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். எங்கள் கூட்டணி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி என அறிவித்துள்ளோம். மற்ற கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வார்த்தைப் போர்
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டி விரைவில் அறிவிக்கப்படும். 20 நாளாக திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கிறது அவர்களிடம் யாரும் கேட்கவில்லை. காலையில் தான் தலைவர்கள் வந்தனர். மதியம் முடிவு செய்தோம். மாலை அறிவித்து விட்டோம். 20 நாட்கள் காங்கிரஸ் -திமுக இடையே வார்த்தைபோர் நடந்தது. எந்த ஊடகமும் இது குறித்து விவாதிக்கவில்லை.
எங்கள் கூட்டணியின் நோக்கம் மக்கள் விரோத திமுக அகற்றப்பட வேண்டும். அதற்காக செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். திமுகவில் இழுபறி இடையில் தான் கூட்டணி அமைத்துள்ளனர். மார்க்சிஸ்ட், விசிகவுக்கு இன்னும் இறுதியாகவில்லை.கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் வாங்கினர். இந்த தேர்தலில் 5 தொகுதிகளுக்கு அலையோ அலை என்று அலைகின்றனர்.
இயல்பு
கனிமொழி ஏன் டில்லி சென்றார். எதற்காக காங்கிரஸ் தலைவரை சந்தித்தனர். சந்தித்த பிறகு ஏதேனும் முடிந்ததா ?கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆலோசனை நடத்துவது இயல்பு. திமுகவில் எப்படி இழுபறி நீடிக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
