சென்னை: நீட் தேர்வுக்கு ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி. 'தங்கமலை ரகசியம் என்ற படம் இருக்கிறது, அந்த கதை

சென்னை: நீட் தேர்வுக்கு ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி. ‘தங்கமலை ரகசியம் என்ற படம் இருக்கிறது, அந்த கதை இதுக்குப் பொருந்தும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: இது துணை முதல்வர் உதயநிதி தொகுதி, அவர் எம்.எல்.ஏ. ஆகும் முன்பு கொடுத்த வாக்குறுதி நிறைவேறினாரா? கழிப்பறை வசதி செய்து கொடுப்பதாகச் சொன்னார், செய்தாரா?

525 வாக்குறுதிகள் கொடுத்த திமுக அவற்றில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் ரத்து செய்வதாகச் சொல்லி செய்யவில்லை, நீட் தேர்வுக்கு ரகசியம் இருக்கிறது என்றார். ‘தங்கமலை ரகசியம் என்ற படம் இருக்கிறது, அந்த கதை இதுக்குப் பொருந்தும். ராஜாவுக்கு காது பெரிதாக இருக்கும், அவருக்கு சிகை அலங்காரம் செய்பவர்.


நீட் ரகசியம்

காதை பார்த்துவிட்டு மனைவியிடம் ராஜா காது கழுதை காது என்பார், மனைவிக்கு அந்த ரகசியத்தை வெளியே சொல்ல முடியாமல் வயிறு வீங்கிவிடும். அதை வெளியே சொல்லியாக வேண்டும் என்பதனால் குழியை வெட்டி ரகசியத்தைச் சொல்லி மூடுகிறார்கள். அங்கே ஒரு மரம் முளைக்கிறது. இந்த நேரத்தில் ராஜா ஒரு விழா நடத்துகிறார்,

அதில் இசைப்பதற்கு மிருதங்கம் செய்வதற்கு, அந்த புதிய மரத்தை வெட்டுகிறார். அந்த மரத்தில் மிருதங்கம் செய்து, இசைத்தால், ‘ராஜா காது கழுதை காது’ என்கிறது. உடனே அதைபோட்டு உடைக்கிறார், அது உடைந்து தெறித்து ஓடுகிறது. அதன் எல்லா உதிரி பாகங்களும், ராஜா காது கழுதை காது என்று கத்துகிறது. நீட் ரகசியத்தை வெளியிட்டால், அந்த கதை மாதிரி ஆகிவிடும் என்று பயப்படுகிறார் உதயநிதி.

இரட்டை வேடம்

நீட் தேர்வு கொண்டுவந்தது காங்கிரஸ், திமுக. அதை எதிர்ப்பதும் அதே காங்கிரஸ், திமுக. எப்படி ஏமாற்றுகிறார்கள்? அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஒரு வருடம் விலக்கு பெற்றார், ஆனால், இந்தியா முழுவதும் நீட் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.

இன்றுவரை நீட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. காங்கிரஸ் தலைவரின் மனைவி நீட்டுக்கு எதிராக வாதாடி நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகச் சொன்னார். செஞ்சதெல்லாம் காங்கிரஸ். ஆனால், திமுக நம் மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? பொய்யை திருப்பித் திருப்பிச் சொல்லி ஏமாத்துகிறார்கள். இதுதான் ஸ்டாலினின் இரட்டை வேடம்.

நல்லாட்சியா?

திமுக ஆட்சியில் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவானது, அதில் 6999 சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூகநலத்துறை அமைச்சரே சொல்கிறார். போக்சோ என்றால் சிறுமிகள் பாலியல் வழக்கு, இந்த ஆட்சி நல்லாட்சியா? வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதிராஜாராமுக்கு வாக்களியுங்கள். தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின், உதயநிதிக்கு பைபை காட்டுங்கள். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Source link