சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக அளித்த 5 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கையெழுத்திட்டனர்.
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐந்து தொகுதிகள் வழங்க தி.மு.க., முடிவு செய்தது. அதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னையில் தேசிய பொதுச்செயலர் பேபி தலைமையில், மாநில நிர்வாகக் குழுவை கூட்டி ஆலோசித்தது.
அதில், கடந்த முறை போலவே, ஆறு தொகுதிகளுக்கு குறையாமல் பெற முடிவு செய்தனர். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, ‘சில சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு ‘சீட்’ ஒதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இடம்பெற்றதால், தங்களுக்கு ஆறு தொகுதிகள் தர முடியவில்லை; ஐந்து தொகுதிகளை தருகிறோம். அதை ஏற்று கூட்டணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதனை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. தொடர்ந்து அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது 5 தொகுதிகளை ஏற்றுக் கொண்ட மார்க்சிஸ்ட், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.
