சென்னை: பதிவுத்துறையில், 200க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், உதவியாளர்கள் அயல் பணி என்ற

சென்னை: பதிவுத்துறையில், 200க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், உதவியாளர்கள் அயல் பணி என்ற பெயரில், தங்களுக்கு விருப்பமான இடங்களில் ஆட்டம் போடுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 589 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்களில், முழுநேர சார் பதி வாளர்கள் இல்லை.

இதனால், அதிக பத்திரம் வரும் இடங்களில், மாவட்ட பதிவாளர்கள் அல்லது உதவியாளர்கள் பத்திரப்பதிவு பணியில் இருந்தனர். இதிலிருந்து மாவட்ட பதிவாளர்கள் விலக்கப்பட்டு, நிர்வாக பணிக்கு அனுப்பப்பட்டனர்.

அதனால், உதவியாளர்கள், 200க்கும் மேற்பட்டோர், பொறுப்பு சார் பதிவாளர்களாக தொடர்கின்றனர். அதிலும், தங்களுக்கு விருப்பமான இடங்களில், அயல்பணி அடிப்படையில் அமர்ந்து, அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சார் பதிவாளர்கள் கூறியதாவது:

பதிவு சட்டப்படி, சார் பதிவாளர்கள் மட்டுமே, பத்திரப்பதிவை மேற்கொள்ள அதிகாரம் பெறுகின்றனர். ஆனால், வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில், இத்துறையில் மட்டும், சார் பதிவாளர்களை ‘டம்மி’ ஆக்கிவிட்டு, பொறுப்பு சார் பதிவாளர்களாக உதவியாளர்கள் ஆட்டம் போடுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட அலுவலகத்தில், சார் பதிவாளர் இடம் காலியாகும் நிலையில், அங்கு, பொறுப்பு சார் பதிவாளர்கள் அதிகபட்சம், 20 நாட்கள் வரையே இருக்க வேண்டும்.

ஆனால், சென்னை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி போன்ற மண்டலங்களில், அதிக பத்திரங்கள் வரும் இடங்களில், மூன்று ஆண்டுகளாக முழுநேர சார் பதிவாளர்கள் இல்லை.

வேறு அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்ட உதவியாளர்கள், பொறுப்பு சார் பதிவாளர்களாக அயல்பணி அடிப்படையில் செயல்படுகின்றனர். இதனால், பத்திரப்பதிவில் பல்வேறு தவறுகள் நடக்கின்றன. குறிப்பாக, வசூலுக்காகவே இவர்கள் குறிப்பிட்ட அலுவலகங்களை கேட்டு பெறுகின்றனர். இதற்கு மாவட்ட பதிவாளர்களும், டி.ஐ.ஜி.,க்களும் துணையாக இருக்கின்றனர்.

இதுகுறித்து, பதிவுத்துறை தலைவரிடம் முறையிட்டு இருக்கிறோம். தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, முழுநேர சார் பதிவாளர்களாக நியமிக்க, பதிவுத் துறை முயற்சித்து வருகிறது. தேர்தல் முடிந்த பின், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, மேலதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link