சென்னை: பாஜ மாநில முன்னாள் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய விரும்புகிறார் என தமிழக பாஜ பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. காங்கிரசை தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பாஜவும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்த பட்டியலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
இருப்பினும் அண்ணாமலை பாஜ வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர், பாஜ வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழகத்தின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் இவர்கள் பெற்றுள்ளனர். ஒரு கட்சி தொண்டனாக வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணியின் 210 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு, பாஜ மற்றும் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்த இருந்தார்.
இது தொடர்பாக பியூஷ் கோயல் கூறியதாவது:பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் மூத்த பாஜ நிர்வாகிகள், மக்களுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொழி கலாசாரம், பெருமையை பாதுகாப்பார்கள் அவர்கள் மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். கட்சியினரின் உணர்வு, வேட்பாளரின் விருப்பத்தின் பேரில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்து அமையும் இபிஎஸ் அரசு, அனைவருக்குமான அரசாக இருக்கும்.
அர்ப்பணிப்புள்ள கூடிய செயல்வீரரான அண்ணாமல தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலம் முழுக்க தேர்தல் பணியாற்ற விரும்புகிறார்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
முன்னதாக அண்ணாமலை போட்டியிடாதது குறித்த கேள்விக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இது கட்சி மேலிடம் எடுத்த முடிவு. பாஜ., வெளியிட்ட 27 வேட்பாளர்களும் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
