சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகனும் அக்கட்சி தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அன்புமணி, கடந்த ஜனவரி 7ம் தேதி, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில் இணைந்தார்.
இதனால், ராமதாசால் எந்தக் கூட்டணியிலும் சேர முடியவில்லை. பா.ம.க., பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை, அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை, மே 10ம் தேதிக்கு பிறகே விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது ராமதாசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தி.மு.க., – அ.தி.மு.க., மறுத்து விட்ட நிலையில், த.வெ.க.,வுடன் சேர வேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற, இரு வழிகள் மட்டுமே அவருக்கு உள்ளன.
பா.ம.க., பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தனிக்கட்சி துவங்கும் கட்டாயத்திற்கு ராமதாஸ் தள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, நேற்று நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பை, ராமதாஸ் வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
