சென்னை: ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்கியுள்ள திட்டங்கள் குறித்து, சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்,’ என தமிழக பா.ஜ.,வின் ஏழு அணி மற்றும், 25 பிரிவுகளின் நிர்வாகிகளுக்கு, கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு, 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி உள்ளது. ‘முத்ரா’ கடன்கள், வீடுகளுக்கு குடிநீர், பிரதமரின் மருத்துவ காப்பீடு என, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு எதுவும் செய்யவில்லை என, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தி.மு.க.,வினர், பொய் பிரசாரம் செய்கின்றனர்.
தற்போது, பெரும்பாலான மக்கள், ‘ஸ்மார்ட்’ போன்களில், சமூக வலைதள பதிவுகளை அதிக அளவில் பார்க்கின்றனர்.
எனவே, பொய் பிரசாரங்களை வீழ்த்த, கடந்த 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு மத்திய அரசு என்னென்ன திட்டங்களை வழங்கியுள்ளது என்பதை, சமூக வலைதளங்களில் அதிகம் பதிவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கட்சி யின் இளைஞரணி, மகளிரணி உட்பட ஏழு அணிகளின் நிர்வாகிகளுக்கும், வழக்கறிஞர், மருத்துவர் உள்ளிட்ட, 25 பிரிவு நிர்வாகி களுக்கு, பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதள பதிவுக்காக, மத்திய திட்டங்கள் தொடர்பான விபரங்களை, பா.ஜ., நிர்வாகிகளுக்கு, கட்சி தலைமை அனுப்பும்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
