சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட 383 இந்தியர்கள், ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்தில், உணவு, தங்குமிடம் இன்றி தவித்துள்ளனர்.
அவர்கள், பிப்., 28ல் தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமனை தொடர்பு கொண்டு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். அன்று நள்ளிரவு, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு, முனிச் நகரில் உள்ள இந்தியர்களை மீட்க அஸ்வத்தாமன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவின் பேரில், இந்திய துாதரக அதிகாரிகள், முனிச் நகரில் தவித்த இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். அவர்களில் 242 பேரை, முதல் கட்டமாக, சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அஸ்வத்தாமன் கூறுகையில், ”முனிச் விமான நிலையத்தில் சிக்கிய இந்தியர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகள் வழங்கி இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். உலகின் எந்த மூலையில் இந்தியர்களுக்கு சிக்கல் என்றாலும், அதை மோடி அரசு உடனே தீர்க்கும். உரிய உதவிகளை செய்த அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி,” என்றார்.
