சென்னை: மெரினாவில் கடைகள் தொடர்பான வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, 600க்கும் மேலான வியாபாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் பின்னணியில், மாபியா கும்பல் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என, உயர் நீதிமன்றம் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தேவி உள்ளிட்டோர், மெரினாவில் கடை ஒதுக்கக் கோரிய மனுக்களை பரிசீலிக்கும்படி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தர விடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
மீண்டும் விசாரணை
இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய சிறப்பு அமர்வு, அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு டிச., 22ல், மெரினா கடற் கரையை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கடந்த முறை விசாரணையில், ‘சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைக்கின்றன. ‘எனவே, மெரினா கடற்கரையின் இழந்த பெருமையும், புகழையும் மீட்டெடுக்கும் வகையில், உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்க, அதிகபட்சமாக 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடைகள் ஒதுக்கீடு பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில், கடைகள் ஒதுக்கீட்டு குலுக்கலை சமீபத்தில் மாநகராட்சி நடத்தியது.
இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 600க்கும் மேற்பட்ட வியாபாரிகள், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, மனு தாக்கல் செய்தனர்.
கடை உரிமையாளர்கள் தரப்பில், ‘கடைகள் எண்ணிக்கை குறைப்பால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது; கடைகளை அதிகரிக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர். மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.இளங்குமரன் ஆஜராகி, ”கடைகள் ஒதுக்கீட்டில், ஒரே பெயரில் இரண்டு, மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை, நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: மெரினா கடற்கரைக்கு அருகில், வேறு இடங்களில் அமைந்துள்ள விற்பனை மண்டலங்களில், விடுபட்ட வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்குவது உறுதி செய்யப்படும். மெரினா கடற்கரையை வியாபார தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது.
கேரள மாநிலத்தின் கோவளம், ஒடிஷாவின் புரி, மும்பை ‘மெரைன் டிரைவ்’ போன்ற கடற்கரைகள், மெரினா போல் அல்லாமல் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. மெரினாவில் அது போன்ற நிலை இல்லை. இந்த நீதிமன்றம் தலையிடும் முன், மெரினா கடற்கரை, கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. ரவுடிகள், மாபியா கும்பலைச் சேர்ந்தோர், மாமூல் வசூலித்து வியாபாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தற்போது, இந்த வழக்கில் தங்களை இணைக்கக் கோரி, வியாபாரிகள் பலரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் பின்னணியில், மாபியா கும்பல் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் நடந்த குலுக்கலில், கடைகள் ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகளில் எவரும், ஒரு பைசா கூட செலுத்தவில்லை.
மாநகராட்சி அனுமதி
கடற்கரையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், அழகான மெரினா கடற்கரையை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு செல்ல முடியாது. கடற்கரையில் கடைகள் அமைப்பதை உரிமையாக கேட்க முடியாது; அவர்களுக்கு தற்காலிகமாகவே மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு துறைகள் வாயிலாக ஆலோசித்தும், தாங்கள் நேரில் ஆய்வு செய்ததன் அடிப்படையிலும், மெரினாவில் 300 கடைகள் மட்டுமே அமைக்க, மாநகராட்சி அனுமதியளிக்க உத்தர விடப்பட்டது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் மீது, பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
