சென்னை: வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வழக்கை ஏப்.14ல்

சென்னை: வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வழக்கை ஏப்.14ல் விசாரிப்பதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட இபிஎஸ், தன் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து, பொய் தகவல்களை தெரிவித்ததாக, மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், ‘விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம்,’ என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘சேலம் நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனவும், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டு, இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இபிஎஸ் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர், இந்த வழக்கு, விசாரணைக்கு எடுக்காமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில், மிலானி தரப்பில் முறையிடப்பட்டது,

அப்போது, ‘இந்த வழக்கு 16 முறை பட்டியலிடப்பட்ட போதிலும் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. அடுத்த சட்டசபை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, பழனிசாமி தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்,’ என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு, ‘மனு மீதான விசாரணை, ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும்,’ என அறிவித்தது.

Source link