சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களுக்கு சொந்தமான வீடுகள், மனைகள், வணிக கட்டடங்களுக்கு, வாடகை நிர்ணயம் செய்ய, புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன.
கோவில்களுக்கு சொந்தமான குடியிருப்புகள், மனைகள் போன்றவற்றுக்கு, சந்தை மதிப்பில், 0.05 சதவீதம், வணிக கட்டடங்களுக்கு 0.60 சதவீதம், காலி நிலங்களுக்கு 0.30 சதவீதம் வாடகை நிர்ணயித்து, கடந்த ஜன., 14ல் அரசாணை வெளியிடப்பட்டது. வாடகை நிர்ணயம் தொடர்பாக, எந்த விதிகளும் இல்லாத நிலையில், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதனால், வாடகை பன்மடங்கு உயர்ந்துள்ளது என, அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து, வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* குடியிருப்பு கட்டடங்கள், மனைகளுக்கு, 2016 ஜூலை 1 முதல், 2025 ஜூன் 20 வரை, வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
* இதன்படி நிர்ணயிக்கப்படும் வாடகை, ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் வாடகையை விட குறைவாக இருந்தால், கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை, எதிர்கால வாடகையில் ஈடு செய்யப்படும்
* அரசாணையின்படி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும்
* வணிக பயன்பாட்டு கட்டடங்கள், மனைகளுக்கு, 2025 ஜூன் 30 வரை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தலாம்
* அரசாணை விதிகளின்படி, 2025, ஜூலை, 1 முதல் வாடகை மறுநிர்ணயம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
