சென்னை: 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை. எனினும், ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், வி.சி.க., தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கப்படுகிறது. ஆனால், தி.மு.க., தலைமை, ஒற்றை இலக்கத்தில் தருவதாக கூறுவதால், இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருமாவளவன் கூறியதாவது:
திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை ‘சீட்’ என இறுதி செய்யப்படவில்லை; 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை. எனினும், ஜனநாயக பயிற்சி முறையில், விருப்ப மனு பெறப்படும். அதற்கான மனு, ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
விருப்ப மனு தாக்கல் எப்போது, கட்டணம் எவ்வளவு, நேர்காணல் உண்டா என்பதெல்லாம் பின்னார் தெரிவிக்கப்படும். தேர்தல் நிதியை பணமாக தரக்கூடாது. டி.டி.,யாக தர வேண்டும்; பணமாகவோ, காசோலையாகவோ கொடுத்தால் ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
