'சேட்டன்' சாம்சன் 'சல்யூட்'

சென்னை: டில்லிக்கு எதிராக சதம் விளாசிய ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன், ‘படையப்பா’ ரஜனி ஸ்டைலில் ‘சல்யூட்’ அடித்து மகிழ்ந்தார். இவர் கூறுகையில்,”பயிற்சியாளர் பிளமிங்கிற்கு தான் ‘சல்யூட்’ அடித்து சதத்தை சமர்ப்பித்தேன். இவரது பணி மிகவும் சவாலானது. பல முறை சோபிக்க தவறியுள்ளேன். அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். கிரிக்கெட்டின் அடிப்படை விஷயங்களை பின்பற்றினேன். எனது திட்டத்தை மாற்றினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. சதம் அடித்து, சென்னைக்கு முதல் வெற்றி தேடித்தந்தது மகிழ்ச்சி அளித்தது.

புதிய அணிக்காக விளையாடுவது எளிதானதல்ல. ஆனால், சென்னை அணி நிர்வாகத்தினர் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்த நிலையிலும், டில்லி போட்டிக்கு முன் 50 வினாடிகள் தான் விவாதித்தோம். இரண்டாவது தாய் வீடு போல உணர்கிறேன்,”என்றார்.

‘லக்கி’ சாஸ்திரி: வர்ணனையாளர் ரவி சாஸ்திரியிடம் சாம்சன் கூறுகையில்,”ஒவ்வொரு போட்டிக்கு முன் உங்களை சந்திப்பது எனக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கிறது. நீங்கள் ராசியான நபர். ‘ப்ளீஸ்’ அனைத்து போட்டிக்கு முன்பாக என்னை சந்தியுங்கள்,” என்றார்.

ருதுராஜ், ராணாவுக்கு அபராதம்

சென்னை: டில்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தாமதமாக பந்துவீசியது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசவில்லை. இதற்காக சென்னை கேப்டன் ருதுராஜுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

* 19வது ஓவரில் டில்லி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது ஈரமான ‘கிளவுசை’ மாற்ற கோரிக்கை விடுத்தார். போட்டிக்கு இடையே மாற்ற அனுமதிக்கப்படவில்லை. இதனால் நான்காவது அம்பயருடன் சக டில்லி வீரர் நிதிஷ் ராணா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது நடத்தை விதிமுறை மீறிய செயல் என்பதால், ராணாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

புயலை கிளப்பும் ‘அலைபேசி’

கவுகாத்தி: கிரிக்கெட் லீக் போட்டியில் (மார்ச், 10, கவுகாத்தி) ராஜஸ்தான் அணி, பெங்களூருவை வீழ்த்தியது. இப்போட்டிக்கு இடையே வீரர்கள் அமரும் பகுதியில் (டக் அவுட்) ராஜஸ்தான் அணி மானேஜர் ரோமி பிந்தர் அலைபேசி பயன்படுத்தியது ‘டிவி’ கேமராவில் அம்பலமானது. அருகில் இருந்த ராஜஸ்தானின் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி எட்டி பார்த்து கொண்டிருந்தார்.

விதிமுறைப்படி அணி மானேஜர், வீரர்களின் ‘டிரஸ்சிங் ரூமில்’ அலைபேசி பயன்படுத்தலாம். ஆனால், மைதானத்திற்குள் ‘டக் அவுட்’ பகுதியில் பயன்படுத்துவது தவறு. இத்தகைய செயல் சூதாட்டத்திற்கு வழிவகுக்கலாம் என்பதால், ரோமி பிந்தருக்கு அபராதம் அல்லது தடை விதிக்கப்படலாம். இது பற்றி பி.சி.சி.ஐ., ஊழல் தடுப்பு அமைப்பினர் விசாரணையை துவக்க உள்ளனர்.

பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில்,”வீடியோ ஆதாரங்களின்படி அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்வோம்,”என்றார்.

Source link