சேலம்: உதயநிதி, நீங்கள் யாருக்காக சென்னையில் கார் பந்தயம் நடத்தினீர்கள், யாருக்காக என்று வெளிப்படையாகச் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரகனூரில் தேர்தல் பிரசாரத்தின் போது கூடியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது; எடப்பாடி காலை தேடினார் என்று உதயநிதி பேசுகிறார். எத்தனை ஆணவப் பேச்சு? தமிழர் பண்பாடு அது. ஒரு பொறுப்பு கிடைக்கும்போது ஆசி பெறுவது தவறா? இதெல்லாம் உயர்ந்த பண்புள்ளவர் என்றால் தெரியும். பண்பில்லாத குடும்பத்தில் பிறந்தவருக்கு தெரியாது.
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா என்று எம்.ஜி.ஆர். பாடல் இருக்கிறது. உதயநிதி இன்று தலையில் நடக்கிறார். நான் பேசினால் நிறைய பேசலாம், பேச வைக்கிறார்கள். என் 51 ஆண்டு காலத்தில் தரக்குறைவாகப் பேசியதில்லை, என்னைப் பற்றி பேசினால் விடமாட்டோம்.
என்னைபோல கிராமத்தில் பிறந்து இந்த நிலைக்கு உயர்ந்திருந்தால் பதவியின் அருமை தெரியும், அது தெரியாதவர் தான் உதயநிதி. நீங்கள் யாருக்காக சென்னையில் கார் பந்தயம் நடத்தினீர்கள், யாருக்காக என்று வெளிப்படையாகச் சொன்னால் அசிங்கமாகப் போய்விடும். யார் பணம்? கார் பந்தயம் தேவையா? மக்களின் வரிப்பணம் வீண். கருணாநிதி நினைவு மண்டபம் கட்டினார்கள், இப்போது எழுதாத பேனாவை 82 கோடியில் வைக்க வேண்டுமா? எழுதும் பேனாவை மாணவர்களுக்குக் கொடுங்கள், பாராட்டுவார்கள்.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 5 ஆண்டு ஆட்சியில் 6999 போக்சோ வழக்குகள் பதிவு, அதற்கு நிவாரணமாக 84 கோடி கொடுத்தோம் என்கிறார் அமைச்சர். சிறுமிகள் பாலியல் சீண்டல் இவ்வளவு வழக்குகள் என்றால் அது நல்லாட்சியா?
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை இருக்கிறது, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த போது தடையாணை வாங்கிவிட்டனர்.
நகர்ப்புற வளர்ச்சி துறையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரத்தோடு வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது, அதிமுக நீதிமன்றம் சென்றது, அதில் வழக்குப்பதிவு செய்யச் சொல்லி தீர்ப்பளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
