புதுடில்லி: நாட்டின் சேவை துறை வளர்ச்சி, கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் புதிய ஆர்டர் வரத்து குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் 58.10 புள்ளிகளாக இருந்த சேவை துறைக்கான பி.எம்.ஐ., குறியீடு, மார்ச் மாதத்தில் 57.50 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது 2025 ஜனவரி மாதத்துக்கு பின் கடந்த 14 மாதங்களில் மிக குறைந்த வளர்ச்சியாகும். எனினும், குறியீடு 50 புள்ளிகளுக்கு கூடுதலாக இருப்பதால், இது மொத்தத்தில் வளர்ச்சியையே குறிக்கிறது.
உள்நாட்டில் தேவை குறைந்தாலும், ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
எரிபொருள், மின்சாரம், பணியாளர் ஊதியம், காய்கறிகள், முட்டை, இறைச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததால், நிறுவனங்களின் செலவு கடந்த 2022 ஜூலை மாதத்திற்கு பிறகான உச்சத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்களுக்கான சேவை கட்டணங்களும் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இதனிடையே, தயாரிப்பு மற்றும் சேவை துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த பிப்ரவரியில் 58.90 புள்ளிகளாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 57 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது கடந்த மூன்றரை ஆண்டுகளில் குறைந்தபட்ச வளர்ச்சியாகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
