சொந்த நலனுக்காக இந்திய வேளாண் துறையை தியாகம் செய்ய மோடி அரசு தயாராகிறது; ராகுல் காந்தி

டெல்லி,

விவசாயிகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்றும் சொந்த நலனுக்காக இந்திய வேளாண் துறையை தியாகம் செய்ய மோடி அரசு தயாராகிவிட்டதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கொள்கையில் மோடி அரசு மாற்றம் கொண்டு வந்ததாக என கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து நேரடி பதில் வரவில்லை. அதற்கு மாறாக ஏற்கனவே உள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையையே பின்பற்றுகிறோம் என்று கூறுகிறது. அதேவேளை, குறைந்தபட்ச ஆதார விலைக்கான போனஸ் தொகையை ரத்து செய்ய மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் குறைந்தபட்ச ஆதார விலை திட்டம் மற்றும் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

விவசாயிகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அதற்குமாறாக சொந்த நலனுக்காக இந்திய வேளாண் துறையை தியாகம் செய்ய மோடி அரசு தயாராகிவிட்டது.

விவசாயிகளின் உரிமைகள் மற்றும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை பாதுகாக்க நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link