முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், ஏதேனும் வழக்கில் விசாரணைக்கு அழைக்க வேண்டுமெனில் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். ஆனால், இந்த நிலையில் அத்தகைய பொதுவான உத்தரவை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனுவில் கூறப்பட்ட கோரிக்கைகள்
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த நிபந்தனைகளை முழுமையாக பின்பற்ற தயாராக இருப்பதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.
மேலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருந்தாலும், சோதனை மற்றும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தங்களை தேவையற்ற முறையில் துன்புறுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அமைச்சரின் பேச்சு குறித்து குறிப்பிட்ட மனுதாரர்கள்
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக “கணக்கு தீர்க்க வேண்டும்” என்று பொதுவெளியில் பேசியதாகவும், அதன் அடிப்படையில் தங்களை வேறு ஏதேனும் வழக்கில் கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
இதனால், காவல்துறையினர் எந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்தாலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 35(3)-வது பிரிவின்படி முறையான நோட்டீஸ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
அரசு தரப்பின் வாதம்
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி,மனுதாரர்கள் மிகவும் பொதுவான உத்தரவை கோரியுள்ளதாகவும், மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.
tvk gilli sarath அமைச்சரின் சர்ச்சை வீடியோ…அரசியல் செய்வது யார்?
மனுதாரர் தரப்பின் விளக்கம்
செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தாலும், வேறு வழக்குகளில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக கூறினார். விசாரணையை தடுக்க விரும்பவில்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பதே தங்களது ஒரே கோரிக்கை என்றும் வாதிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் “தங்களை துன்புறுத்தக் கூடாது” என்ற வகையில் பொதுவான உத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், மற்ற வழக்குகள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதற்கு முன்பே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், முன்கூட்டியே பாதுகாப்பு உத்தரவு வழங்க நீதிமன்றத்துக்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் தாக்கல் செய்த இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
