மதுரை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலில் முழு கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியீட்டுக்கு முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்த ‘ஜனநாயகன்’, திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இருப்பினும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற காரணத்தால் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை படம் ரூ.250 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “ஜனநாயகன் திரைப்படத்தில் படத்தில் பொய்யான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை, பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில் வழக்கு. பாப்பாபட்டி பகுதியை வன்முறை பூமியாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடிய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் வன்முறையை தூண்டும் காட்சிகளை நீக்க வேண்டும். பாப்பாபட்டி பகுதியின் நற்பெயருக்கு படக்குழு களங்கம் விளைவித்துள்ளது . படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் , “மனுதாரர் சமூக வலைதளங்களில் படத்தை பார்த்ததாக சொல்கிறார், அதுவே குற்றம். சட்டவிரோதமாக படத்தை பார்த்து எப்படி ஆட்சேபனைகளை தெரிவித்தீர்கள்?..படத்தில் படத்தில் பாப்பாப்பட்டி என்று இடம் பெறவில்லை. பாப்பம்பட்டி என்று தான் வருகிறது” என்ற கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு விவாதத்தையும் கேட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், படத்தை சட்டவிரோதமான இணையத்தில் பார்ப்பது போன்ற விஷயங்கள் ஊக்குவிக்கத்தக்கது அல்ல என்று நீதிபதிபதி காட்டமாக தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு தணிக்கை வாரியம், இயக்குநர் எச். வினோத், பட தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
