கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் குளறுபடி நடந்தது குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிருப்தி தெரிவித்துள்ளார். ”ஜனாதிபதிக்கு இழைக்கப்பட்டுள்ள அவமதிப்புக்கு மாநில அரசே பொறுப்பு,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல் வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கும் பழங்குடியினர் சமூகத்திற்கான வருடாந்திர மாநாடு, சிலிகுரியின் பிதான்நகரில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்களை கூறி, அங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, பாக்தோக்ரா விமான நிலையம் அருகில் உள்ள கோஷாய்பூரில் மாநாடு நடத்த மாநில அரசு தரப்பில் அனுமதி தரப்பட்டது.
அதிருப்தி
இந்நிலையில், பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மேற்கு வங்கம் சென்றார்.
சிலிகுரி மாவட்டத்தில் உள்ள பாக்தோக்ரா விமான நிலையம் சென்ற அவரை, சிலிகுரி நகர மேயர் கவுதம் தேப் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
ஜனாதிபதியை வரவேற்க மாநில முதல்வரோ, அமைச்சர்களில் ஒருவரோ வரும் நெறிமுறை பின்பற்றும் நிலையில், மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றது ஜனாதிபதிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அனுமதி அளிக்கப்பட்ட கோஷாய்பூர் பகுதிக்கு முதலில் சென்ற திரவுபதி முர்மு, பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சொற்ப அளவே பழங்குடியினர் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றது, ஜனாதிபதிக்கு ஏமாற்றத்தை அளித்தது.
அதைத் தொடர்ந்து, அனுமதி மறுக்கப்பட்ட பிதான்நகர் பகுதியிலும் பழங்குடியினர் மத்தியில் ஜனாதிபதி முர்மு உரையாடினார்.
முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
நானும் மேற்கு வங்க மாநிலத்தின் மகள்தான். இங்கு ஆட்சி செய்யும் முதல் வர் மம்தா பானர்ஜி, எனக்கு இளைய சகோதரி போன்றவர். அவர் வருத்தமாக இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் அனை வரும் நலமாக இருங்கள்.
இடவசதி
பிதான்நகரான இங்கு, பழங்குடியினர் வருடாந்திர மாநாட்டை நடத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தம் 5 லட்சம் பேர் வரை இங்கு கூட போதுமான இடவசதி உள்ளது. இந்த இடத்தில் கூட்டம் நடத்த மாநில அரசு அனுமதி அளிக்காதது ஏன் என தெரியவில்லை.
அனுமதி வழங்கப்பட்ட கோஷாய்பூரில் குறைந்த அளவு கூட்டமே காணப்பட்டது. உண்மையிலேயே அங்கு வருவதுதான் மக்களுக்கு சிரமமாக இருந்திருக்கும்.
அங்கு நிகழ்ச்சி ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படவில்லை. இது, பழங்குடியினர் நலனை மாநில அரசு விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
ஜனாதிபதி வருவார்; காலியான இடத்தில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு அவர் திரும்பிவிடுவார் என மாநில அரசு அதிகாரிகள் நினைத்திருப்பர் போலும். அவர்கள் இப்படி நடந்து கொண்டது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
என் சிலிகுரி பயணத்தின்போது, நெறிமுறை மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஏராளமான குளறுபடி நடந்தது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., துாண்டுதல்!
மேற்கு வங்க அரசை இழிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்முவை பா.ஜ., பயன்படுத்துகிறது. அந்த அளவுக்கு அக்கட்சி தரம் தாழ்ந்து விட்டது. சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் துாண்டுதலின்படி, ஜனாதிபதி முர்மு அரசியல் செய்கிறார். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பழங்குடியினரின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது, ஜனாதிபதி முர்மு அமைதி காத்தது ஏன்? மணிப்பூரில் பழங்குடியினர் சித்ரவதை செய்யப்பட்ட போது மவுனமாக இருந்தது ஏன்? மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
வெட்கக்கேடு!
சந்தாலி கலாசாரம் போன்ற முக்கியமான நிகழ்வை மேற்கு வங்க அரசு இவ்வளவு அலட்சியமாக கையாண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது வெட்கக்கேடானது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி முர்மு வெளிப்படுத்திய வலியும், வேதனையும் நாட்டு மக்களின் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க அரசு உண்மையிலேயே அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. ஜனாதிபதிக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு அம்மாநில நிர்வாகமே பொறுப்பு. ஜனாதிபதி பதவி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்பதவியின் புனிதத்தன்மை எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசுக்கு இனியாவது நல்ல புத்தி வரட்டும். நரேந்திர மோடி, பிரதமர்
