தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஜாபர் சாதிக், பெருமளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்தப் புதிய தகவல்களின் அடிப்படையில், தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வருமான வரித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் எழும்பூர், கீழ்ப்பாக்கம், அண்ணா சாலை, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. குறிப்பாக, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, எழும்பூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள ஜெ.எஸ்.எம். விடுதி ஆகியவற்றில் அதிகாரிகள் பல மணி நேரம் சோதனையிட்டனர். இதேபோல் புதுச்சேரியில் அவருக்குத் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பான புதிய ஆதாரங்கள் சிக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
