ஜி.டி.பி., தரவுகள்: இனி பொருளாதாரத்தை துல்லியமாக சொல்லும்

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, இந்தியாவின் பொருளாதார புள்ளிவிபர நிபுணர்கள் மிக இக்கட்டான நிலையில்தான் இருந்து வந்தனர். சமீபகாலங்களில் கூட, 2011–12ம் ஆண்டை அடித்தளமாக வைத்துக்கொண்டு, வெறும் 180 பொருள்களின் விலை அடிப்படையில், ஜி.டி.பி., எனப்படும் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அவர்கள் கணக்கிட வேண்டியிருந்தது.

அதிலும், அரைகுறை தரவுகள் என்று துறை வல்லுநர்களால் நிராகரிக்கப்படும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள், முறைசாரா துறைகள் குறித்த அரத பழசான கணக்கெடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்தி, அவர்கள் வெளியிட்ட ஜி.டி.பி., தரவுகள், உண்மையுடன் ஒட்டாமலேயே நின்றன.

Image 1542458

ஆனால், 2026 பிப்., 27ம் தேதியுடன் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. அன்றைய தினம் ஜி.டி.பி.,யை கணக்கிடுவதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய முறையே அதற்கு காரணம்.

அடிப்படை ஆண்டு

பொருள்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. எனவே, கணக்கீட்டு ஆண்டில், உண்மையான விற்பனை வருவாயை கணக்கிட, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அந்த பொருள்களின் விலைகள் என்னவாக இருந்ததோ, அதைக் கொண்டு கணக்கிடப்பட்டு, ஜி.டி.பி., தரவில் சேர்க்கப்பட்டது. அந்த குறிப்பிட்ட ஆண்டை தான் ‘அடிப்படை ஆண்டு’ என்கிறோம்.

இதுவரை 2011 – 12ம் ஆண்டுதான் அடிப்படை ஆண்டாக இருந்து வந்தது. ஆனால், ஜி.எஸ்.டி., இல்லாத, யு.பி.ஐ., பண பரிவர்த்தனைகளை பார்த்திராத, இ-காமர்ஸ் என்பது மிகவும் சொற்பமாக இருந்த அந்த காலக்கட்டத்தை கொண்டு ஜி.டி.பி.யை கணக்கிடாமல், புதிய முறையில் 2022 – 23ம் நிதியாண்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

அது மட்டுமல்ல, டிஜிட்டல் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள், சரக்கு போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட 500 – 600 பொருள்களின் விலைகள் ஜி.டி.பி., மதிப்பீட்டின்கணக்கில் இப்போது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இது, ஜி.டி.பி., குறித்த தரவுகளை இன்னும் துல்லியமாக்க உதவும்.

ஜி.எஸ்.டி., தரவுகள்

இதையெல்லாம் விட பெரிய முன்னேற்றம், ஜி.டி.பி., கணக்கீட்டுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி தரவுகள் பயன்படுத்தப்படுவது தான். அதாவது, இதுவரை நிறுவனங்கள் அளிக்கும் நிதிநிலை அறிக்கைகளை கொண்டே நிறுவன உற்பத்தி ஜி.டி.பி., தரவில் சேர்க்கப்பட்டது.

ஆனால், நிறுவனங்கள் அந்த அறிக்கைகளில் துல்லியமற்ற புள்ளிவிபரங்களை தரும். சிறிய நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யாது என்பதால், இது உண்மையான நிறுவன வருவாயை வெளிப்படுத்தாது என்று நீண்ட காலமாகவே பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வந்துள்ளனர்.

தற்போது, அத்தகைய நிதிநிலை அறிக்கைகளுக்கு பதில் ஜி.எஸ்.டி., தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவனங்களின் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் ஜி.எஸ்.டி., பிணைந்திருப்பதால், அந்த தரவுகள் நிறுவனங்களின் உண்மையான வருவாயை காட்டும். ஜி.எஸ்.டி., தரவையும் கூடுதலாக துல்லியமாக்கும்.

முறைசாரா துறைகள்

இந்தியாவின் பொருளாதாரத்தில் 90 சதவீதத்துக்கும் மேல் பங்கு வகிப்பது முறைசாரா தொழில் துறைகள் தான். இந்த துறைகளின் வாயிலாக கிடைத்த ஜி.டி.பி.,யை கணக்கிட, இதுவரை பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட காலாவதியான கணக்கெடுப்பே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்குப் பதிலாக, மிக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஏ.எஸ்.யு.எஸ்.இ., எனப்படும் ‘பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கை’ பயன்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, சிறு வணிகர்கள், கைத்தொழில்கள், குடும்ப தொழில்கள் செய்வோர், கட்டுமான தொழிலாளர்கள், வேளாண்மை பணியாளர்கள் என எண்ணற்ற துறையினரின் சரியான தரவுகள் ஜி.டி.பி.,யில் இன்னும் அதிகமாக பிரதிபலிக்கின்றன.

இது மட்டுமின்றி, மாதந்தோறும் எடுக்கப்படும், பி.எல்.எப்.எஸ்., எனப்படும் வேலைவாய்ப்பின்மை குறித்த கணக்கெடுப்பின் தரவுகளும் புதிய ஜி.டி.பி., கணக்கீட்டில் சேர்க்கப்படுகிறது.

இந்த வகையில், ஜி.டி.பி., தரவுகள் என்பது, பொருளாதார நிலவரத்தை இனி இன்னும் துல்லியமாக எடுத்துரைக்கும். ஆனால், அவை நம் நாட்டின் வளர்ச்சியை அதிகமாக காட்டுமா, குறைத்து காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source link