ஜெனிவா: அணுசக்தி கட்டமைப்புகள் அருகே தாக்குதல் நடத்தப்படுவதற்கு கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னோம், இது பொது சுகாதாரம் மற்றும் அதன் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; மத்திய கிழக்கு பகுதியில் போர் ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டி உள்ளது. ஈரானில் உள்ள நடான்ஸ் செறிவூட்டல் வளாகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானிலும், இஸ்லேிலும் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களை சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வு செய்து வருகிறது. அங்கு, அசாதாரணமான நிலை அல்லது கதிர்வீச்சு எதுவும் பதிவாகவில்லை.
அணுசக்தி தளங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், பொது சுகாதார மற்றும் அதன் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன.போர் துவங்கியதில் இருந்து, அணுசக்தி நிலையங்களில் பிரச்னை ஏற்பட்டால், எப்படி கையாள வேண்டும் என 13 நாடுகளில் உள்ள உலக சுகாதார அமைப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.அனைத்து தரப்பினரும் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைபிடித்து அணுசக்தி சம்பவங்களை தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும். பதற்றத்தை தணிப்பதற்கும், பொது மக்களை பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன்.அமைதியே சிறந்த மருந்து. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
