டாக்கா: வங்கதேசத்தில், ஹிந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின்போது, ஹிந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்தது. தற்போது அவரது ஆட்சி முடிந்து, கடந்த வாரம் வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது.
இதையடுத்து சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், புதிய அரசு அமைந்த ஒரே வாரத்தில் ஹிந்து பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
சந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 25 வயது பெண், உடல் ஊனமுற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இசை நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த அவரை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
