ஹைதராபாத்: தெலுங்கானாவில், ‘டிஜிட்டல் கைது’ மோசடி மூலம் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, 1 கோடி ரூபாய்க்கு மேல் இழந்தது தெரிய வந்துள்ளது.
போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், ‘மொபைல் போன்’ வீடியோ அழைப்பு மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே, ‘டிஜிட்டல்’ கைது எனப்படுகிறது.
மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடி அதிகளவில் நடக்கிறது.
இந்நிலையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் வசிக்கும் 69 வயதான ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிக்கு, கடந்த மாதம் 23ம் தேதி மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில் பேசினார்.
அப்போது அந்த நபர், தன் பெயர் தீபக் குமார் எனவும், சி.பி.ஐ., மூத்த அதிகாரி என கூறி, இரண்டு மொபைல் எண்களை பயன்படுத்தி பல பெண் களுக்கு தகாத அழைப்புகள் செய்ததாகவும், இது தொடர்பாக கர்நாடகாவின் பெங்களூரில் தங்கள் மீது வழக்கு பதிவானதாக பொய் யாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே, மற்றொரு நபர் அந்த அழைப்பில் இணைந்தார். தான் அப்பகுதி இன்ஸ்பெக்டர் கவுரவ் சாரதி எனவும், உங்கள் ஆதாரை தவறாக பயன்படுத்தி மனித கடத்தல் அரங்கேறியதாகவும் ஜாமினில் வெளியே வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதே அழைப்பில் மற்றொரு பெண் ஒருவரும் இணைந்தார். தன் பெயர் அர்ச்சனா ராமசுந்தரம் எனவும், சி.பி.ஐ., மூத்த அதிகாரி என கூறி, ‘வாட்ஸாப்’ செயலியை பயன்படுத்தி வீடியோ கால் அழைப்பில் இணையும்படி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிக்கு அவர் கட்டளையிட்டார்.
அப்போது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியிடம், உச்ச நீதிமன்ற சின்னம் பொறித்த கடிதத்தை காட்டியதுடன், பண மோசடி, மனிதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரிடம், சமீபத்தில் மேற்கொண்ட வங்கி பணப் பரிவர்த்தனைகளை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர்.
இப்படியே, 10 நாட்களாக தொடர்ந்து தொடர்பில் இருந்த இக்கும்பல், சரிபார்ப்பு நடவடிக்கைக்காக பல்வேறு வங்கி கணக்குகளுக்கு தாங்கள் குறிப்பிடும் தொகையை அனுப்பும்படி வற்புறுத்திஉள்ளது.
இதன்படி, தன் வங்கி கணக்கில் இருந்து 1.66 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார். அதன்பின், அக்கும்பலின் மொபைல் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, போலீசில் புகார் அளித்தார். இதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
