தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிந்துவெளி நாகரிகத்துடனான அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் பறைசாற்றும் வகையில், தொல்லியல் துறையில் ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அகழாய்வுத் தளங்களில் கண்டறியப்பட்ட மட்பாண்டக் குறியீடுகளை ஆவணப்படுத்தி, அவற்றை இணையச் செயலியாக மாற்றும் பிரம்மாண்டத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொல்லியல் தளங்களில் கண்டறியப்படும் மட்பாண்ட ஓடுகளில் காணப்படும் கீறல் குறியீடுகள், தமிழி (தமிழ்-பிராமி) மற்றும் சிந்துவெளி எழுத்துகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
தொடக்க கால எழுத்து முறைகளின் பரிணாம வளர்ச்சியையும், தமிழர்களின் பண்பாட்டு வேர்களையும் புரிந்துகொள்வதில் இந்தக் குறியீடுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இதனை உலகறியச் செய்யும் நோக்கில், ‘Documentation and Digitization of Graffiti and Tamili Inscribed Potsherds of Tamil Nadu’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) இணைந்து இத்தொகுப்பை உருவாக்கியுள்ளன.
