– நமது டில்லி நிருபர் -:
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுக்க முழுக்க, ‘டிஜிட்டல்’ முறையில் நடத்தப்பட உள்ளன. இதில், 32 லட்சம் அரசு அலுவலர்கள் நாடு முழுதும் ஈடுபட உள்ளனர். இந்த பணிக்கான புதிய பிரசார உருவ சின்னங்கள் மற்றும் தளங்களை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில், ‘மக்கள் தொகை 2027’ க்கான பணிகள் ஏப்ரல் 1 முதல் துவங்கவுள்ளன.
இந்த பணிகளை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் ஏப்ரலில் துவங்கி, செப்டம்பர் வரையில் வீடுகளின் பட்டியல் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை ஆகியவை கணக்கெடுக்கப்படும்.
இதில், 33 கேள்விகளுக்கு மக்களிடம் இருந்து பதில்கள் பெறப்படும். இதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 2ம் கட்டமாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பமாகும்.
அப்போதுதான், ஜாதிவாரியான விபரங்கள் பற்றிய கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் அனைத்துமே, ‘டிஜிட்டல்’ முறையில் நடத்தப்பட உள்ளது. அதன்படி, மக்கள் அனைவரும் தங்கள் சுயவிபரங்கள் அனைத்தையும், ‘ஆன்லைன்’ வாயிலாக தாமாகவே பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
இதற்காகவே, 16 மொழிகளில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்போர் வீடுவீடாக வந்து விபரங்களைக் கேட்பதற்கு முன்பே, மக்கள் இந்த தளங்களில் தங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த கணக்கெடுப்புக்கான 4 அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் நடவடிக்கைகள் அனைத்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் டில்லியில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன.
1 ‘ஹவுஸ் லிஸ்ட்டிங் பிளாக் கிரியேட்டர்’ – இது, செயற்கைக்கோள் மூலம் குறிப்பிட்ட பகுதியை கண்டறிந்து சரிபார்க்கச் செய்கிறது. வீடுகளின் பட்டியலை டிஜிட்டல் முறையில் உருவாக்க இந்த இணைய வரைபட செயலி உதவும்
2 ‘ஹெச்.எல்.ஓ., மொபைல் போன் செயலி’ – இதைப் பயன்படுத்தி, மக்களிடம் விபரங்களை, கணக்கெடுப்பாளர்கள் சேகரித்து, அவற்றை பாதுகாப்பார்கள். 16 மொழிகளில் இது இயங்கும்
3 ‘செல்ப் எனுமெரேஷன் போர்ட்டல்’ – இதில் ஆன்லைன் வாயிலாக மக்கள் தங்கள் விபரங்களை சுயமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவரின் தகவல்களை கணக்கெடுப்பாளர் சரிபார்த்துக் கொள்ள முடியும்
4 ‘சென்செஸ் மேனேஜ் மென்ட் அண்டு மானிட்டரிங் சிஸ்டம்’ – இதுதான், கணக்கெடுப்பு பணிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள பிரத்யேக டிஜிட்டல் இணையதளம். இதை ‘சென்டர் பார் டெவலப்மெண்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் நிறுவனம்’ வடிவமைத்துள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள, 32 லட்சம் அரசு அலுவலர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வீடு தேடி வரும் ‘விகாஷ், பிரகதி’
‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027’ ஐ குறிக்கும் பிரசார உருவங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். அதன்படி, கணக்கெடுப்பு பணிகளை உருவகப்படுத்தும் விதமாக, ஆண் – பெண் உருவ சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண் உருவ சின்னத்துக்கு, ‘விகாஸ்’ என்றும் பெண் உருவத்துக்கு, ‘பிரகதி’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
