வாஷிங்டன்: ஈரான் மீதான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்பாடு மற்றும் அவர் தெரிவித்து வரும் கருத்துகளை அடுத்து, அவரை பதவி நீக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, அந்நாட்டு செனட் சபையில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும்படி, ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல முறை வலியுறுத்தியுள்ளார். இதற்காக கொடுத்த அவகாசத்தை அவர் தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதியாக இன்று வரை காலக்கெடு விதித்துள்ளார் டிரம்ப். இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான வசை சொற்களுடன் கூடிய கடுமையான ஆட்சேபனைக்குரிய ஆபாச வார்த்தைகள் அடங்கிய மிரட்டலையும், தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு, உலக நாடுகள் பலவும் அதிருப்தி தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சித் தலைவர்கள் மற்றும் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தின் நான்காவது பிரிவைப் பயன்படுத்தி, அதிபரை அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அமெரிக்க அரசியலமைப்பின் 25வது திருத்தச் சட்டத்தின் நான்காவது பிரிவின்படி, ஒரு அதிபர் தன் பணிகளையும், கடமைகளையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கருதப்பட்டால், துணை அதிபர் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மையினர், அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கு, அமெரிக்க செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. இது செயல்படுத்தப்பட்டால், துணை அதிபர் உடனடியாக பொறுப்பு அதிபராக பதவியேற்பார்.
தற்போது செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில், பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை. குடியரசு கட்சி 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 45 உறுப்பினர்களுடனும், சுயேச்சைகள் இரண்டு உறுப்பினர்களுடனும் உள்ளனர்.
