புதுடில்லி: டில்லியில் மேம்பாலத்தில் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீராகர்ஹி மேம்பாலத்தில் கேட்பாரின்றி டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று நீண்ட நேரமான நின்றிருப்பதாக தீயணைப்புத்துறையினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து சென்று காரைத் திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பெண், இரு ஆண்கள் என 3 பேர் உயிரிழந்த நிலையில், சடலமாக காரின் உள்ளே கிடந்தனர்.
விசாரணையில் உயிரிழந்தவர்கள், ரன்தீர் சிங்,60, லட்சுமி சிங்,40, சிவ நாராயண்,46, ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரின் சடலத்தையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாரேனும் கொலை செய்து விட்டு சடலங்களை காரில் விட்டுச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மேம்பாலத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே, 3 பேரின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
