-டில்லி சிறப்பு நிருபர்-: தமிழகத்தில் வரும் 23-ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம்

-டில்லி சிறப்பு நிருபர்-:

தமிழகத்தில் வரும் 23-ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசியல் கட்சிகள் வாரி வழங்குவதால், தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் 23ல் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரம் சூடுபிடித்துள்ளதால், தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கறிஞர் ஜெய்சுகின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதன் விபரம்:

வாக்காளர்களுக்குப் பணம், நகை, கொலுசு, குடம், வெள்ளி குத்துவிளக்கு போன்றவற்றை அரசியல் கட்சியினர் லஞ்சமாக கொடுக்கின்றனர். அது மட்டுமின்றி, தேர்தல் வாக்குறுதிகளாக உதவி தொகை கொடுப்போம், வாஷிங் மெஷின் கொடுப்போம், பரிசு கூப்பன் கொடுப்போம் என அரசியல் கட்சியினர் அடுக்கடுக்காக இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

விதிமுறை மீறல் இவை அனைத்துமே நம் அரசியல்சாசன விதிகளுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானது. இந்த விதிமுறை மீறல்களை தமிழக அரசியல் கட்சிகள் வெளிப் படையாகவே செய்து வருகின்றன.

விசாரணை தற்போது நடைபெற்று வரும் தேர்தல் நடவடிக்கைகள் சட்டத்திற்குப் புறம்பாக அரங்கேறி வருகின்றன. எனவே, தமிழக சட்டசபை தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தேர்தலை நிறுத்தி வைக்க தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நாளை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இதேபோன்ற வழக்கில், ‘ஓட்டுக்கு பணம் வழங்கும் விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷன் பிடியை இறுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான உத்தரவை பிறப்பிக்கும் என்பது தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.

Source link