டில்லி மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் விடுவிப்பு! உறுதியான ஆதாரமில்லை என நீதிமன்றம் தீர்ப்பு

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட, 23 பேரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2015 – 24 வரை, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். 2015 – 23 வரை, அவரது கட்சி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா துணை முதல்வராக பதவி வகித்தார்.

கடந்த 2021 – 22ல், ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்த போது, புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகை

இந்த மதுபான கொள்கையில், 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது குறித்து விசாரிக்க, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்தார். இதன்படி வழக்குப் பதிந்த சி.பி.ஐ., 2023 பிப்ரவரியில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. 2024 மார்ச்சில், முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்தது.  மேலும் இந்த வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆறு மாதமும், மணீஷ் சிசோடியா இரு ஆண்டுகளும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில், சி.பி.ஐ., சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

கவலை அளிக்கிறது

இந்த வழக்கில், சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங் நேற்று அளித்த தீர்ப்பு: சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்றன. அதில் சதித்திட்டத்துக்கான எந்தவொரு முகாந்திரமும் குறிப்பிடப்படவில்லை. வெறும் ஊகங்களின் அடிப்படையிலேயே சி.பி.ஐ.,யின் வாதங்கள் கட்டமைக்கப்பட்டு உள்ளன. அவை சட்ட ரீதியான ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் இல்லை

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை. போதிய அடிப்படை முகாந்திரமின்றி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இது, சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது. மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதில் அவர் சம்பந்தப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை.

விசாரணையில் உள்ள ஓட்டைகளை மறைக்க, ‘அப்ரூவர்’ கொடுத்த வாக்குமூலங்களை மட்டுமே சி.பி.ஐ., நம்பியிருந்தது கவலை அளிக்கிறது. இது, தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே, இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் விடுவிக்கப்படுகின்றனர். இந்த வழக்கை முறையாக விசாரிக்காத சி.பி.ஐ., விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேல்முறையீடு செய்வர்!

விசாரணை நீதிமன்றம் ஆதாரம் இல்லை என விடுவித்துள்ளது. இந்த வழக்கில், சி.பி.ஐ., அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கும். டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் உள்ளன.
– சுதான்ஷு திரிவேதி ராஜ்யசபா எம்.பி., – பா.ஜ.,

இன்னும் முடியவில்லை!

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் வந்துள்ள தீர்ப்பு விசாரணை நீதிமன்றத்துடையது. இதே வழக்கில் இதற்கு முன், டில்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கெஜ்ரிவாலுக்கு எதிராக கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளன. இந்த தீர்ப்பு மேல்முறையீட்டில் நிலைக்குமா என பார்க்க வேண்டும். சட்ட நடைமுறை முடியவில்லை.
– அமித் மாள்வியா, ஐ.டி., பிரிவு தலைவர், பா.ஜ.,

கண்ணீர் விட்டு கதறிய கெஜ்ரிவால்

மதுபான கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தகவலை அறிந்ததும், அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “எனக்கு எதிரான ஊழல் வழக்கு என்பது சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் சதி. நானும், மணீஷ் சிசோடியாவும் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நீதிமன்றம் நிரூபித்துள்ளது,” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மியை அழிப்பதற்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து ஒரு பொய்யான மதுபான கொள்கை வழக்கை உருவாக்கி, சதித் திட்டத்தை தீட்டினர். வாழ்நாள் முழுதும் நான் சம்பாதித்தது நேர்மையும் நற்பெயரும் மட்டுமே. இந்த போலி வழக்கின் மூலம் என் நற்பெயரை சிதைக்க அவர்கள் முயன்றனர். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு நன்றி.
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையின் வழக்குகளில் இருந்தும் விடுவிக்கக் கோரி, விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். டில்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். அதில், பா.ஜ., 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.ஐ., மேல்முறையீடு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை விடுவித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., உடனடியாக மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது பல முக்கிய அம்சங்களை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

‘சவுத் குரூப்’ சொல்லாடலுக்கு கண்டனம்

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தன் குற்றப்பத்திரிகையில், தென் மாநிலங்களை சேர்ந்த நபர்கள் என்பதை குறிக்க, ‘சவுத் குரூப்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தது. இதற்கு, டில்லி சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நீதிபதி ஜிதேந்திர சிங் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை அவர்கள் வசிக்கும் பகுதி அல்லது பிராந்திய அடையாளத்தின் அடிப்படையில், ‘சவுத் குரூப்’ என அழைப்பது சட்டரீதியான எந்த வகைப்பாடுக்கும் உட்பட்டது அல்ல. இதற்கு முன், ‘நார்த் குரூப்’ போன்ற பிராந்திய அடையாளம் பயன்படுத்தப்படவில்லை. குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சொற்களில் மிகுந்த கவனம், கட்டுப்பாடு மற்றும் நடுநிலைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களிடம் ஆதாரம் உள்ளது: ஈ.டி.,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை வழக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சி.பி.ஐ., வழக்கின் அடிப்படையில், நாங்கள் விசாரணையை துவக்கினாலும் எங்களிடம் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன. பண மோசடி குற்றம் தனி குற்றமாக கருதப்பட வேண்டும். அது தொடர்பான விபரங்கள் எங்கள் குற்றப்பத்திரிகையில் விரிவாக உள்ளன’ என்றனர்.

Source link